ஆறுமுகநேரியில் பரிதாபம்:நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு


ஆறுமுகநேரியில் பரிதாபம்:நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 19 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 10:53 AM GMT)

ஆறுமுகநேரியில் நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியவிபத்தில் வாலிபர் இறந்து போனார்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆறுமுகநேரியில் சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

வாலிபர்

காயல்பட்டினம் சேது ராஜா தெருவை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வாணி (வயது 43). இவர்க ளுடைய 3-வது மகன் பிரதீப் (வயது 23). இவர் ஆறுமுகநேரி சீனந்தோப்பு பகுதியில் மனைவி சித்ராவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 8 மாத ஆண் குழந்தை உள்ளது.

சம்பவத்தன்று ஆறுமுகநேரி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு பிரதீப் ெசன்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இரவு 10 மணி அளவில் தன்னுடைய வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நாய் மீது மோதி விபத்து

ஆறுமுகநேரி-அடைக்கலாபுரம் ரோட்டில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே சென்ற போது, ரோட்டின் குறுக்கே ஒரு நாய் ஓடியுள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த நாய் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் பிரதீப் தூக்கி வீசப்பட்டு ரோட்டில் விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, திருச்செந்தூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

சாவு

அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story