சென்னிமலை அருகே பரிதாபம்:தந்தை, மகள் தூக்குப்போட்டு தற்கொலைஉருக்கமான கடிதம் சிக்கியது


சென்னிமலை அருகே தந்தை, மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து காெண்டனா்

ஈரோடு

சென்னிமலை அருகே தந்தை, மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டனர். அவர்கள் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.

உடல்நலம் பாதிப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள தோப்புபாளையத்தை சேர்ந்தவர் தங்கராசு (வயது 63) விவசாயி. இவருடைய மனைவி தங்கமணி (வயது 53). இவர்களது மகள்கள் பிரியங்கா (வயது 31), கார்த்திகா (வயது 27).

கார்த்திகாவுக்கு திருமணமாகிவிட்டது. பிரியங்காவுக்கு உடல்நலம் சரியில்லை என்பதால் திருமணம் ஆகவில்லை. தங்கராசுக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு இதய கோளாறு ஏற்பட்டதால் 'பேஸ் மேக்கர்' கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அவருக்கு அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தது.

தூக்கில் தொங்கினர்

மகள் பிரியங்காவுக்கும், தனக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததால், தங்கராசு சில நாட்களாகவே மன வேதனையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் தங்கராசுவின் மனைவி தங்கமணி ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டார்.

மாலையில் அவர் வீடு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் குளியறை விட்டத்தில் கயிற்றால் தூக்குப்போட்டு தங்கராசுவும், பிரியங்காவும் பிணமாக தொங்குவதை கண்டு, அதிர்ச்சி அடைந்த தங்கமணி அலறி துடித்தார்.

கடிதம் சிக்கியது

இதுகுறித்து சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று தந்தை-மகள் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தங்கராசுவும், பிரியங்காவும் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில் எங்கள் இருவருக்கும் உடல்நலம் சரியில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்கிறோம். வேறு எந்த காரணமும் இல்லை என்று எழுதி வைத்திருந்தனர். அந்த கடிதத்தை கைப்பற்றிய பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தை, மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story