கறம்பக்குடி அருகே பரிதாபம்: காது, மூக்கை அறுத்து மூதாட்டி படுகொலை


கறம்பக்குடி அருகே பரிதாபம்: காது, மூக்கை அறுத்து மூதாட்டி படுகொலை
x

கறம்பக்குடி அருகே குளிக்க சென்ற மூதாட்டியை நகைக்காக காது, மூக்கை அறுத்து படுகொலை செய்த தொழிலாளியை போலீசாா் கைது செய்தனா்.

புதுக்கோட்டை

மூதாட்டி

புதுக்கோட்டை மாவட்டம் கந்தா்வகோட்டை தாலுகா அண்டனூரை சோ்ந்தவா் ராமாயி (வயது 80). இவரது கணவர் தங்கப்பா ஏற்கனவே இறந்துவிட்டார். இதனால் தனது மகன் வீட்டில் வசித்து வந்தார். இந்தநிலையில் மூதாட்டி ராமாயி நேற்று காலை குளிப்பதற்காக அண்டனூா் அருகே உள்ள கிருஷ்ணம்பட்டி கணேசன் என்பவரது தோட்டத்திற்கு சென்றுள்ளாா்.

மூதாட்டி குளித்து கொண்டிருந்தபோது அங்கு கிருஷ்ணம்பட்டியை சோ்ந்த தொழிலாளி மாரிமுத்து (33) என்பவா் வந்தார்.

பிளேடால் காது, மூக்கு அறுப்பு

ராமாயி தனியாக குளிப்பதை பார்த்த மாரிமுத்து திடீரென ராமாயியை தாக்கி கழுத்தை நெரித்து கீழே தள்ளியுள்ளார். மேலும் அவரது கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துவிட்டு காதில் அணிந்திருந்த தோடு மற்றும் மூக்குத்தியை பறிப்பதற்காக ராமாயியின் காது, மூக்கை பிளேடால் அறுத்து உள்ளார்.

இதில் வலி தாங்க முடியாமல் மூதாட்டி அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அங்கு காது, மூக்கில் ரத்தம் வழிய ராமாயி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அருகில் மாரிமுத்து மயங்கிய நிலையில் தண்ணீரில் கிடந்தார்.

கைது

இதைக்கண்ட அப்பகுதி மக்கள் ராமாயியை மீட்டு கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராமாயி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மழையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் மயங்கிய நிலையில் இருந்த மாரிமுத்துவை மீட்டு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் ராமாயியை நகைக்காக கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதாக கூறப்படுகிறது.

மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்ததை பார்த்த மாரிமுத்து மயக்கம் அடைந்தது போல் நடித்தாரா? அல்லது மூதாட்டி அவரை தள்ளிவிட்டதில் மயங்கி விழுந்தாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், இந்த சம்பவம் குறித்து கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனிச்சாமி வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தார்.

பிரேத பரிசோதனை

மூதாட்டியின் உடலில் காயம் இருப்பதால் அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதையடுத்து, கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குளிக்க சென்ற மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் கறம்பக்குடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story