ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி


ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி
x
தினத்தந்தி 14 July 2022 6:45 PM GMT (Updated: 14 July 2022 6:45 PM GMT)

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,712 அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1,712 அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தொடங்கி வைத்தார்.

ஒரு லட்சம் மரக்கன்றுகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1,712 அரசு பள்ளி வளாகங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம் சின்னமேலுப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

முன்னதாக கலெக்டர் தலைமையில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

நீர் கேரிப்பு

இயற்கையின் முக்கியத்துவம் மற்றும் பசுமையான சுற்று சூழலை பாதுகாக்க தமிழக அரசு மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்துதல், வேளாண் உற்பத்தியை பெருக்க நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தண்ணீர் வேண்டுமென்றால் மழை வேண்டும், மழை வேண்டுமென்றால் மரங்கள் இருக்க வேண்டும். சுற்றுச்சூழல் காப்பதிலும், மரங்களை வளர்ப்பதிலும், காலநிலை தீய விளைவுகளை கட்டுபடுத்தவும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள உள்ள 1,712 அரசு பள்ளிகளில் ஒரு லட்சம் மரக்கன்று நட திட்டமிடப்பட்டுள்ளது.

பராமரிக்க வேண்டும்

மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாவட்ட வனத்துறை மற்றும் சமூக ஆர்வலர்கள் உதவியுடன் மூன்று மாத காலத்திற்குள் மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இந்தபணியில் பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் தங்களை முழுமையாக ஈடுபடுத்தக்கொண்டு மரகன்றுகளை நட்டு வைத்து முறையாக பராமரிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி, மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வடிவேலு, உதவி திட்ட அலுவலர் நாராயணா, மாவட்ட சுற்றுச்சுழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, தாசில்தார் நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் வேடியப்பன், பள்ளி தலைமையாசிரியர் சுமதி, உதவி தலைமையாசிரியர் சரளா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்தார். கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் யசோதா பூங்காவனம், ஒன்றியக்குழு உறுப்பினர் கவிதாபிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story