பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை


பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை
x

திருவள்ளூர் அருகே தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்த பிளஸ்-2 மாணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருவள்ளூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி விடுதியின் 2-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக நடந்த கலவரம், கைது போன்ற நிகழ்வுகள் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதன் பின்னர் ஒருவழியாக மாணவியின் உடல் கடந்த சனிக்கிழமை அடக்கம் செய்யப்பட்டது. இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் நேற்று மீண்டும் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

பிளஸ்-2 மாணவி

திருவள்ளூர் அருகே மப்பேடு அடுத்த கீழசேரியில் 'சேக்ரட் ஹார்ட்' பெண்கள் மேல்நிலைப்பள்ளி என்ற அரசு உதவி பெறும் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் திருத்தணியை அடுத்த சூரியநகரம் தெக்கனூர் காலனியை சேர்ந்த பூசனம்-முருகம்மாள் தம்பதியின் மகள் சரளா (வயது 17) என்பவர் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாணவி சரளா பள்ளி சீருடை அணிந்து விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட தயாரானார். முன்னதாக சக மாணவிகளுடன் கேண்டீனில் சாப்பிட சென்றார்.

தற்கொலை

பின்னர் திடீரென அவர் மட்டும் தனியாக விடுதியில் உள்ள முதல் மாடிக்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் சக மாணவிகள் அங்கு சென்று அவரை தேடினர். ஆனால் அங்கு அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. விடுதி அறையில் இருந்த மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அலறிய மாணவிகள் கூச்சலிட்டனர்.

உடனே இதுகுறித்து விடுதி பொறுப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பள்ளி நிர்வாகம் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக்கு விடுமுறை

சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், திருவள்ளூர் டி.எஸ்.பி. சந்திரதாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் விரைந்தனர். இதைத்தொடர்ந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை தொடர்ந்து பள்ளி நிர்வாகம் உடனடியாக அந்த பள்ளிக்கு விடுமுறை அளித்தது.

பெற்றோர்கள் போராட்டம்

சரளா தங்கியிருந்த விடுதியில் அவருடன் 85 மாணவிகள் தங்கி உள்ளனர். மாணவி தற்கொலை செய்துகொண்ட தகவல் காட்டுத்தீ போல் பரவியதை தொடர்ந்து மற்ற மாணவிகளின் பெற்றோர்கள் பள்ளி வளாகம் முன்பு திரண்டு தங்கள் மகள்களை பார்க்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.அதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மாணவியின் தாயார் மயங்கி கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பெற்றோர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

பள்ளி முற்றுகை

மாணவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அதற்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கோரியும் அவரது உறவினர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா விரைந்து வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் டி.ஐ.ஜி. சத்யபிரியா கூறியதாவது:-

சி.பி.சி.ஐ.டி. விசாரணை

பள்ளி விடுதியில் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இறந்த மாணவியின் இறப்பு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் யாரும் வதந்தியை நம்ப வேண்டாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

போலீசார் குவிப்பு

மேலும் அசம்பாவிதத்தை தடுக்க காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி சத்யபிரியா தலைமையில் திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு பா.சீபாஸ் கல்யாண், காஞ்சீபுரம் சூப்பிரண்டு சுதாகர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் பள்ளி வளாகம் முன்பும், மாணவி தற்கொலை செய்து கொண்ட விடுதியின் முன்பும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் மாணவியின் உடல் வைக்கப்பட்டிருந்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

உடலை வாங்க மறுப்பு

இதற்கிடையே மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் என்றும் மாணவியின் உறவினர்கள் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

இதுகுறித்து மாணவியின் சகோதரர் சரவணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பூச்சி கடித்து இறந்ததாக...

பள்ளி நிர்வாகம் சார்பில் முதலில் எங்களுக்கு போன் செய்து உங்கள் மகள் பூச்சி கடித்து இறந்து விட்டார் என்று கூறினார்கள். சிறிது நேரம் கழித்து அவர் மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்தார் என தெரிவித்தனர். பின்னர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என முன்னுக்கு பின் முரணாக தெரிவித்தனர். இதன் காரணமாகவே அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இ்வ்வாறு அவர் தெரிவித்தார்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் பள்ளி விடுதியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டார்.

அப்போது திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன், தி.மு.க. திருவள்ளூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி பூபதி, சப்-கலெக்டர் மகாபாரதி ஆகியோர் உடன் இருந்தனர்.

தற்கொலை நடந்த பள்ளியின் முன்பு புரட்சி பாரதம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி விடுதியில் கைரேகை நிபுணர்கள் சோதனை: மாணவியின் உடல் இன்று பிரேத பரிசோதனை

மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நேற்று இரவு நேரமானதால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என உத்தரவிட்டார். எனவே இன்று(செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் 4 பேர் கொண்ட கைரேகை நிபுணர் குழுவினர் பள்ளி வளாகத்திற்கு சென்று விடுதியில் தடயங்களை சேகரித்தனர்.


Next Story