செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர், மெக்கானிக் பலி


செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர், மெக்கானிக் பலி
x

‘செல்பி’ எடுத்த போது செம்பரம்பாக்கம் ஏரியில் தவறி விழுந்த பிளஸ்-2 மாணவர் மற்றும் கார் மெக்கானிக் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள தரப்பாக்கம், பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 20). கார் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.

அதே தரப்பாக்கத்தை சேர்ந்தவர் ரிச்சர்ட்ஸ் (16). இவர், அங்குள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க சென்றனர்.

ஏரியில் விழுந்து பலி

செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றி பார்த்துவிட்டு, ஏரிக்குள் இறங்கி அங்கிருந்த சிறிய மதகில் ஏறி நின்றபடி தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் செம்பரம்பாக்கம் ஏரிக்குள் தவறி விழுந்துவிட்டனர். இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினர்.

இதனை கண்ட அங்கிருந்தவர்கள், 2 பேரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியாததால் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் விக்னேஷ், ரிச்சர்ட்ஸ் இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

உடல்கள் மீட்பு

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு செம்பரம்பாக்கம் ஏரியில் விழுந்து பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டனர். குன்றத்தூர் போலீசார் இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செம்பரம்பாக்கம் ஏரியில் நண்பருடன் குளித்த பிளஸ்-2 மாணவன் ஒருவரும், நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி பலியானான் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story