பா.ம.க. பொது நிழல் பட்ஜெட்


பா.ம.க. பொது நிழல் பட்ஜெட்
x
தினத்தந்தி 13 March 2023 6:45 PM GMT (Updated: 13 March 2023 6:46 PM GMT)

பா.ம.க. சார்பில் 2023-24-ம் ஆண்டு பொது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்

விழுப்புரம்

திண்டிவனம்

பொது நிழல் பட்ஜெட்

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. சார்பில் 2023-24-ம் ஆண்டு பொது நிழல் பட்ஜெட்டை நேற்று டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

பா.ம.க. சார்பில் பொது நிழல் பட்ஜெட் 21 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருகிறது. இதேபோல் மேல்நிலை நாடுகளிலும் நிழல் பட்ஜெட் வெளியிடப்படுகிறது.

131 தலைப்புகள்

இந்தியாவில் எந்த எதிர்க்கட்சிகளும் செய்யாததை பா.ம.க. மட்டும் தான் நிழல் பட்ஜெட்டை மக்கள் மாமன்றத்தில் முன் வைக்கிறது. 2023-2024-ம் ஆண்டின் நிழல் பட்ஜெட்டில் 131 தலைப்புகளில் 514 கருத்தியல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இயன்ற வகையில் இதை பயன்படுத்திக் கொண்டால் முழுமையான வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் அடையும்.

தற்போது உலக அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவின் பொருளாதாரமும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழக பொருளாதார நிலையும் மந்தமடையும்.

1½ லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

5 ஆண்டுகளில் ரூ.3.88 லட்சம் கோடி கடன்களை அடைப்பதற்கு ரூ.1.80 லட்சம் கோடி வரி அல்லாத வருவாயை உயர்த்த சிறப்பு திட்டங்களும், 2023-24-ம் ஆண்டு போதைப்பொருள் ஒழிப்பு சிறப்பு ஆண்டாகவும், போதைப்பொருள் விற்பவர்கள், கடத்துபவர்கள் தொடர்ந்து குற்றத்தை செய்பவர்களை பிடிக்கும் வகையில் டி.ஜி.பி. நிலையிலான அதிகாரி தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

ஏழை குடும்பங்களுக்கு மாதம் ரூ.2 ஆயிரம், நடப்பாண்டில் 1½ லட்சம் பேருக்கு அரசு வேலை, தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு 80 சதவீதம் இட ஒதுக்கீடு, வரும் 5 ஆண்டுகளில் ஒரு கோடி வேலைவாய்ப்புகள், டி.என்.பி.எஸ்.சி. நிலையான தேர்வு அட்டவணை, வேலையில்லா இளைஞர்களுக்கு 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தால் ரூ.1,000, தேர்ச்சி பெற்றால் ரூ.2 ஆயிரம், 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றால் ரூ.3 ஆயிரம், பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.4 ஆயிரம், பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவி தொகையாக வழங்கப்படும்.

தாலிக்கு தங்கம் திட்டம்

படிக்கும் பிள்ளைகள் இடைநிற்றலை தடுக்கும் வகையில் ரூ.15 ஆயிரம் வரை நிதி வழங்கப்படும், மாநில கல்விக்கொள்கை, உயர்கல்வி கடன்கள் தள்ளுபடி, மருத்துவ துறைக்கு ரூ.35 ஆயிரம் கோடி, மீண்டும் தாலிக்கு தங்கம் திட்டம், வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 20 சதவீதம் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது, தமிழில் படித்தோருக்கு மட்டுமே அரசு வேலை. இதனால் பிற மாநிலத்தவர்களால் தமிழர்கள் வேலை வாய்ப்பில் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

வணிகர்கள் தமிழில் பெயர் பலகை வைத்தால் ரூ.1,000 வழங்குவது, ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி தொழில் முதலீடு, ஆண்டுக்கு 100 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம், பஸ் கட்டணம் உயர்த்தப்படாது, ரூ.25 லட்சம் கோடியில் உள்கட்டமைப்பு, புதிய உயர் கல்வி நிறுவனங்கள், பொதுச்சேவை உரிமை சட்டம், மாதம் ஒருமுறை மின் அளவீடு, சட்டம்-ஒழுங்கு, வேளாண்மை, பரந்தூர் விமான நிலையம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் போன்றவைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

திருப்பி அனுப்ப வேண்டும்

தமிழக கவர்னர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பியது குறித்து கேட்டதுக்கு, சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை கண்ணை மூடிக்கொண்டு கவர்னர் கையெழுத்திட வேண்டும். கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பும் கவர்னர் மாற்றப்பட வேண்டும். வேறு வழி இல்லை என்றார்.

டாக்டர் அன்புமணி ராமதாஸ்

இதைத் தொடர்ந்து பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசியதாவது:-

அரசு நடத்தும் போட்டி தேர்வுகள் குழப்பத்தில் உள்ளது. குறிப்பிட்ட தேர்வுகள் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தப்பட வேண்டும். இந்த நிழல் பட்ஜெட்டில் கல்வி, வேளாண்மை, மருத்துவம் ஆகியவற்றுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. என்.எல்.சி. நிறுவனம் விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்த கூடாது. என்.எல்.சி.க்காக விளைநிலங்களை கொடுத்தவர்களுக்கு இதுவரை வேலை தரவில்லை. பா.ம.க. என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் மேற்கொண்டு தான் வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், மாநில பொருளாளர் திலகபாமா, தலைமை நிலைய செயலாளர் இசக்கி படையாட்சி, சிவக்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், வன்னியர் சங்க மாநில தலைவர் பு.தா.அருள்மொழி, கிளியனூர் ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story