தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, பேச்சுப்போட்டிகள் - கலெக்டர் தகவல்


தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, பேச்சுப்போட்டிகள் - கலெக்டர் தகவல்
x

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டத்தில் 11,12-ம் வகுப்பு மாணவர்கள், கல்லூரிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளிடையே தமிழில் படைப்பாற்றலையும், பேச்சாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சி துறை வாயிலாக தமிழில் கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடத்தி முதல், 2-வது மற்றும் 3-வது பரிசுகள் முறையே ரூ.10 ஆயிரம், ரூ.7 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு போட்டிக்கும் வழங்குவதோடு, பாராட்டுச் சான்றிதழும் வழங்கி சிறப்பிக்க பெற்று வருகிறது.

இந்த போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் அரசு செலவில் செல்லும் வாய்ப்பையும் பெறுவர். 2022, 2023-ம் ஆண்டுக்கான 11,12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் வருகிற 5-ந்தேதி (புதன்கிழமை) அன்று செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலை கல்லூரியில் காலை 9 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. போட்டி நாளன்று மாணவர்கள் தங்கள் வருகையை பதிவு செய்து போட்டிகளில் கலந்து கொள்ளலாம். விண்ணப்ப படிவம் மற்றும் விதிமுறைகள் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் முதன்மைகல்வி அலுவலர் கல்லூரி கல்வி இணை இயக்குநர் மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

போட்டியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவிகள் மட்டும் பங்கேற்கலாம்.

போட்டியில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமையாசிரியர் கல்லூரி முதல்வரின் அனுமதி பெற்று பரிந்துரையுடன் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 பேரை மட்டும் தெர்வு செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் அனுப்பி வைக்க வேண்டும்.

ஒரு மாணவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்கும் மாணவருக்கு பயணப்படி வழங்க இயலாது.

கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகளுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-வது பரிசு ரூ.7 ஆயிரம், 3-வது பரிசு ரூ.5 ஆயிரம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெறும்.

எழுதுவதற்கான வெள்ளைத்தாள்கள், எழுதுகோல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெறும். போட்டி நாளன்றே முடிவுகள் அறிவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.

போட்டிக்கான தலைப்புகள் போட்டி நடைபெறும் அரங்கில் அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறும் மாணவர், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு, அரசு செலவிலேயே அனுப்பப்படுவர்.

போட்டிகளில் பங்கேற்க செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 11,12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி ,கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் பள்ளி தலைமையாசிரியரிடமும், கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்லூரி முதல்வரிடமும் பரிந்துரை பெற்று போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story