ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை


ரெயில் நிலையங்களில் போலீசார் தீவிர சோதனை
x
தினத்தந்தி 20 Nov 2022 6:45 PM GMT (Updated: 20 Nov 2022 6:46 PM GMT)

மங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, குமரியில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

மங்களூருவில் குண்டுவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, குமரியில் போலீசார் விடிய, விடிய வாகன சோதனையில் ஈடுபட்டனர். ரெயில் நிலையங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

விடிய, விடிய போலீசார் சோதனை

கர்நாடக மாநிலம் மங்களூரு நகர் நாகுரி பகுதியில் நேற்றுமுன்தினம் மாலையில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில் மங்களூருவில் நாசவேலைக்கு திட்டமிட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மங்களூரு வெடிகுண்டு சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். மேலும் நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி மற்றும் தக்கலை ஆகிய போலீஸ் சப்-டிவிசனுக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு முதல் காலை வரை விடிய, விடிய தீவிர வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரெயில் நிலையங்களில்...

போலீசார் பல்வேறு இடங்களில் தடுப்பு வேலிகள் அமைத்து வாகன சோதனை நடத்தினர். மேலும் நாகர்கோவில், கன்னியாகுமரி, இரணியல், குழித்துறை உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் பயணிகளின் உடமைகள் மற்றும் ரெயில் பெட்டிகளில் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் தீவிர சோதனை நடத்தினர்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கேத்ரின் சுஜாதா தலைமையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பயணிகளின் உடமைகள், ரெயில் மூலம் வெளியூர் அனுப்புவதற்காக வைத்திருந்த பொருட்கள், ரெயில் நிலைய வளாகத்தில் நின்ற வாகனங்களை சோதனையிட்டனர். ரெயில் நிலையத்தில் இருந்து செல்லும் தண்டவாளத்தையும் சற்று தூரம் வரை சென்று கண்காணித்தனர்.


Next Story