மதுரை கோர்ட்டில் சரணடைந்த வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு


மதுரை கோர்ட்டில் சரணடைந்த வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
x

திருச்சியை சேர்ந்த ரவுடி கொலை வழக்கில் மதுரை கோர்ட்டில் சரண் அடைந்த வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் முக்கிய ரவுடியை பிடிக்க தனிப்படையினர் தீவிரம் காட்டியுள்ளனர்.

புதுக்கோட்டை

திருச்சி ரவுடி கொலை

திருச்சியை சேர்ந்த ரவுடி இளவரசன் (வயது 31). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இளவரசன் கடந்த 12-ந் தேதி ஒரு வழக்கு தொடர்பாக புதுக்கோட்டை கோர்ட்டில் கையெழுத்திட்டு விட்டு மோட்டார் சைக்கிளில் சென்ற போது புதுக்குளம் அருகே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கணேஷ்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய திருவாரூரை சேர்ந்த சுரேஷ் (24), சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த சங்கர் (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் திருச்சியை சேர்ந்த 2 ரவுடிகளுக்கு இடையே திருச்சி சிறையில் ஏற்பட்ட மோதலில் ஒரு தரப்பை சேர்ந்த ரவுடியை கொலை செய்ய இளவரசன் திட்டமிட்ட போது, எதிர்தரப்பினர் முந்தி, அவரை வெட்டி படுகொலை செய்தது தெரியவந்தது.

சரண் அடைந்த வாலிபர்

இதில் கைதானவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருச்சியை சேர்ந்த பிரபல ரவுடி துரை என்பவரை முதல்தகவல் அறிக்கையில் முதல் குற்றவாளியாக சேர்த்துள்ளனர். மொத்தம் 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரவுடி இளவரசன் கொலையில் தொடர்புடைய மதுரையை சேர்ந்த ஹரிஹரன் (21) அங்குள்ள கோர்ட்டில் சரண் அடைந்ததாக புதுக்கோட்டை கணேஷ்நகர் போலீசாருக்கு தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து ஹரிஹரனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் மற்ற 6 பேரையும் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டியுள்ளனர்.

சுட்டுப்பிடிக்க உத்தரவா?

இது குறித்து போலீஸ் வட்டாரத்தினர் கூறுகையில், திருச்சியை சேர்ந்த ரவுடி துரை மீது ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர் தலைமறைவாகவே உள்ளார். இந்த வழக்கிலும் அவர் திட்டம் தீட்டி தான் இளவரசனை படுகொலை செய்துள்ளார். தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான அவரை பல்வேறு இடங்களில் தேடி வருகிறோம்'' என்றார்.

இதற்கிடையில் ரவுடி துரையை சுட்டுப்பிடிக்க உத்தரவு விடப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவியது. இது குறித்து கணேஷ்நகர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஜாபரிடம் கேட்ட போது, அப்படி எதுவும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. வெறும் வதந்தியாக இருக்கும் என்றார்.

திருச்சி ரவுடி கொலை வழக்கில் மீதமுள்ளவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story