குறைந்த முதலீட்டில் அதிக லாபம்.. பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


குறைந்த முதலீட்டில் அதிக லாபம்.. பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சம் மோசடி: மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 7 Sep 2023 5:41 AM GMT)

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் அருகே உள்ள டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணை, கடந்த 4-ந் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வாட்ஸ்-அப் எண் மூலம் தொடர்புகொண்டு பேசினார். அப்போது அந்த நபர், ஆன்லைன் பகுதிநேர வேலை எனக்கூறி கூகுள் மேப்பிலிருந்து ஒரு லிங்கை அனுப்பி வைத்து அதில் வரும் ஓட்டல், ரெஸ்டாரண்ட்டின் புகைப்படத்தை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பி வைத்தால் குறிப்பிட்ட தொகை தரப்படும் என்றார்.

இதை நம்பிய அப்பெண், அந்த நபர் கூறியவாறு செய்து ரூ.210-ஐ பெற்றுள்ளார். பின்னர் நேற்று முன்தினம் அந்த நபர், டெலிகிராம் ஐடியில் இருந்து அப்பெண்ணை தொடர்புகொண்டு, சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறினார். அதன்படி அப்பெண், ரூ.1,000 முதலீடு செய்து ரூ.1,410-ஆக திரும்ப பெற்றார்.

பெண்ணிடம் பணம் மோசடி

பின்னர் அப்பெண்ணை, மற்றொரு டெலிகிராம் குழுவில் இணைந்து ஒரு லிங்கை அனுப்பி வைத்தனர். அந்த லிங்கிற்குள் சென்று தனக்கென பயனர் முகவரி, பாஸ்வேர்ட் ஆகியவற்றை பதிவேற்றம் செய்து டாஸ்க் செய்வதற்காக, தான் கணக்கு வைத்திருக்கும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட ஜிபே மூலம் ரூ.99 ஆயிரத்தை 5 தவணைகளாக அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்பும், அப்பெண்ணுக்கு சேர வேண்டிய தொகையை தராமல் மேலும் பணம் கேட்டு ஏமாற்றி மோசடி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை நூதன முறையில் மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story