பண்ருட்டி அருகே மகளின் கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தப்பட்ட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை


பண்ருட்டி அருகே மகளின் கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தப்பட்ட தொழிலாளி சாவு கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 15 July 2023 6:45 PM GMT (Updated: 15 July 2023 6:45 PM GMT)

பண்ருட்டி அருகே மகளின் கள்ளக்காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தப்பட்ட தொழிலாளி உயிரிழந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

புதுப்பேட்டை,

பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள கோட்லாம்பாக்கம் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது 56), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சத்தியாவதி. இவர்களுடைய மகள் சுபாஷினிக்கும்(28), வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்த மோகன் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் கணவன், மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சுபாஷினியும், மோகனும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இதனிடையே சுபாஷினி, திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அப்போது அதே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த கும்பகோணத்தை சேர்ந்த வெற்றி என்கிற வெற்றிமாறனுடன் சுபாஷினிக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதற்கிடையே சுபாஷினி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவர் வீட்டிற்கு சென்று விட்டார்.

கத்திக்குத்து

இந்த நிலையில் சுபாஷினி தனது பெற்றோர் வீடான கோட்லாம்பாக்கத்திற்கு வந்திருப்பதாக அறிந்த வெற்றிமாறன் கடந்த 3-ந்தேதி அங்கு வந்தார். அப்போது அங்கிருந்த சுப்பிரமணியிடம் தனது காதலி எங்கே? எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வெற்றி மாறன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சுப்பிரமணியை சரமாரியாக குத்தினார். இதை தடுக்க வந்த சத்தியாவதியையும் அவர் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த சுப்பிரமணி சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

கொலை வழக்காக மாற்றம்

இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெற்றி மாறனை கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணிநேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story