திருவண்ணாமலை: நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண்ணை அடைத்து வைத்துள்ளதாக புகார் - போலீசார் அதிரடி சோதனை


திருவண்ணாமலை: நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண்ணை அடைத்து வைத்துள்ளதாக புகார் - போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 27 Jun 2022 6:27 AM GMT (Updated: 27 Jun 2022 6:45 AM GMT)

நித்யானந்தா ஆசிரமத்தில் இளம்பெண் அடைத்து வைத்து இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்தவர் நாகேஷ். இவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் கடந்த 2017ம் ஆண்டு முதல் கர்நாடக மாநிலத்தில் பிடதி பகுதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு சேவைகளை செய்து வந்துள்ளார். இதையடுத்து 2019ம் ஆண்டு நாகேஷ்,அவரது மனைவி மற்றும் மூத்த மகளும் ஆசிரமத்தில் இருந்து வெளியேறினர்.

இந்நிலையில் இரண்டாவது மகள் மட்டும் ஆசிரமத்தில் தங்கி தொடர்ந்து சேவை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அவ்வப்போது ஆசிரமத்திற்கு நேரில் சென்று நாகேஷ் அவரது மகளை பார்த்து விட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக அவரது மகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அப்போது பிடதியில் ஆசிரமத்தை தொடர்பு கொண்டு தனது மகளை கண்பிக்குமாறு கேட்டுள்ளார். அந்த சமயத்தில் செல்போன் மூலம் வீடியோ காலில் நாகேஷ் பேசி வந்துள்ளார். அதன் பிறகு தனது மகளை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக்கூறி பிடதி ஆசிரமத்தில் உள்ள தனது மகளை மீட்டுத் தருமாறு கர்நாடக போலீசில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புகார் செய்துள்ளார்.

ஆனால் பிடதி ஆசிரமத்தில் இருந்து நாகேஷின் மகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ததாக நாகேஷுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனால் அவர் தனது மகளை பல இடங்களில் தேடி உள்ளார். இந்த நிலையில் திருவண்ணாமலையில் உள்ள நித்தியானந்தா ஆசிரமத்தில் நாகேஷின் மகள் இருப்பதாக அவருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து நாகேஷ் திருவண்ணாமலை தாலுகா போலீசில் தனது மகளை மீட்டுத்தருமாறு புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் நேற்று இரவு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமாமாலினி தலைமையில் போலீசார் நித்யானந்தா ஆசிரமத்திற்கு நாகேஷ் மற்றும் அவரது மனைவியுடன் நேரில் சென்று சோதனை நடத்தியதால் அங்கு அவரது மகன் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story