பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா?


பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.

பொங்கல் பரிசு

அதேபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ½கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது.

2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது. ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரொக்கமாக ரூ.100 மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.

கசப்பான அனுபவம்

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் மனநிலை

அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது.

இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விபரம் வருமாறு:-

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:- பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம்.

எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின. இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது. எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பரிசுத்தொகுப்பு

குன்னூரை சேர்ந்த ஜான்மாரி செல்வகுமார்:- ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்களுக்கு அரசு சார்பாக பொங்கல் தொகுப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த பொங்கல் தொகுப்பானது தமிழக அரசு சார்பாக ரொக்கமாக பணம் கொடுக்கப்படும் என தெரிகிறது. எனவே தமிழக அரசு ரூபாய் மட்டும் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பாக கொடுக்காமல் வேஷ்டி, சேலை மற்றும் பொங்கலுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் பரிசுத்தொகுப்பாக வழங்க வேண்டும்.

தாயில்பட்டி கலைஞர் காலனி ஞான ஒளி:-

பொங்கல் தொகுப்பாக கடை மூலம் பொங்கலுக்கு பொருட்கள் வழங்குவதற்கு பதிலாக பணமாக வழங்கினால் பொங்கலுக்கு தேவையான பொருட்களை கூடுதலாக பணம் செலுத்தி திருப்தியாக பொங்கல் வைக்க முடியும். இதன்மூலம் எண்ணற்ற ஏழை குடும்பத்தினர் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாடுவர்.

ஏமாற்றம்

காரியாபட்டி விவசாயி ஆதிமூலம்:- காரியாபட்டி பகுதி முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதியாகும். விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்வோம். ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு பொங்கல் பரிசுகளை பொருளாக வழங்கி வந்தனர்.

ஆனால் பொருளாக வழங்கி வந்தது பொதுமக்களுக்கு குறித்த அளவில் சென்றடையவில்லை. இதனால் பொதுமக்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு பணமாக வழங்கினால் விவசாயிகள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாட வழி வகுக்கும்.

பணம் - பொருள் வேண்டும்

விருதுநகர் இல்லத்தரசி தனலட்சுமி:-

பொங்கலையொட்டி பொங்கல் பொருட்களை இலவசமாக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பொங்கலுக்கு தமிழக அரசு பொருட்கள் வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் என்னை போன்ற இல்லத்தரசிகளுக்கு பொங்கல் பொருட்கள் வழங்க வேண்டியது அவசியமாகும். அதே நேரத்தில் பொங்கல் செலவுக்கு பணம் கொடுத்து உதவினால் மகிழ்ச்சியோடு பொங்கலை கொண்டாடும் வாய்ப்பு ஏற்படும். எனவே இந்த பொங்கலுக்கு தமிழக அரசு தரமான இலவச பொங்கல்பொருட்களுடன், பணமும் கொடுக்க வேண்டும் என்பதே என்னை போன்ற சாமானிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் விருப்பமும், எதிர்பார்ப்பும் ஆகும்.

எதிர்பார்ப்பு

ரெங்கபாளையத்தை சேர்ந்த இல்லத்தரசி சித்ரா:- தை பொங்கலுக்கு தேவையான பொருட்களுடன், பணமும் சேர்த்து கொடுத்தால் நன்றாக இருக்கும். அரசு கொள்முதலை நம்பி விவசாயிகள் பொங்கல் தொகுப்புக்காக விளைவிக்கப் பட்டிருக்கும் கரும்பு மற்றும் உற்பத்தி செய்யப்பட்டிருக்கும் வெல்லம் ஆகிய பொருட்கள் கொண்ட தொகுப்புக்களை பாரம்பரியம் மாறாமல் தமிழக மக்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் ஆசையாகும். இதனை அரசு கைவிடாமல் தமிழக மக்களுக்கு வழங்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story