பொங்கல் பரிசு தொகுப்பா? ரொக்கப் பணமா?


பொங்கல் பரிசு தொகுப்பா?   ரொக்கப் பணமா?
x
தினத்தந்தி 20 Dec 2022 7:00 PM GMT (Updated: 20 Dec 2022 7:00 PM GMT)

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.

திண்டுக்கல்

பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி மாதம் 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது.

தமிழர்களின் திருநாளான அன்று, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கும், பெரியவர்கள் இளையவர்களுக்கும் பொங்கல்படி கொடுத்து வாழ்த்துவது வழக்கமாக இருந்து வருகிறது.

திருமணமாகி புகுந்த வீட்டுக்கு சென்ற பெண்களுக்கு தாய் வீடுகளில் இருந்து பொங்கல் பொருட்களுடன், கரும்பு, மஞ்சள், கிழங்கு என பொங்கல்படி அனுப்பி வைப்பது உண்டு.

பொங்கல் பரிசு

அதுபோல் தமிழக அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி 2009-ம் ஆண்டு அறிமுகம் செய்தார்.

ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் அரைக் கிலோ பச்சரிசி, வெல்லம், 20 கிராம் பருப்பு, முந்திரி, திராட்சை ஆகிய பொருட்கள் அடங்கிய பரிசுப்பை அப்போது வழங்கப்பட்டது.

2011-ம் ஆண்டு வரையில் பொங்கல் பரிசுப்பை திட்டம் நடைமுறையில் இருந்தது.

ஆட்சி மாறியதும் 2012-ம் ஆண்டு பொங்கல் பரிசுப்பை வழங்கப்படவில்லை. 2013-ம் ஆண்டு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரையுடன் பொங்கலுக்கு தேவையான முந்திரி, திராட்சை போன்ற பொருட்கள் வாங்குவதற்கு ரூ.100 ரொக்கப்பணம் மற்றும் கரும்பு ஆகிய தொகுப்புகளுடன் இந்தத் திட்டத்தை மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரிவுப்படுத்தினார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பரிசு தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. ரூ.100 ரொக்கப்பணம் நிறுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனபிறகு 2018-ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

இன்ப அதிர்ச்சி

2019-2020 ஆகிய ஆண்டுகளில் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.

2021-ம் ஆண்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2 ஆயிரத்து 500 பணம் கொடுக்கப்பட்டது. அப்போது சட்டசபை தேர்தல் நடைபெற இருந்ததால் பொங்கல் கவனிப்பு பலமாக இருந்ததாக விமர்சனங்களும் எழுந்தன.

2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததும், குடும்ப அட்டை தாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் மஞ்சள் பை, முழு கரும்பு ஆகிய 21 பொருட்களுடன் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவுப்படுத்தினார்.

கசப்பான அனுபவம்

இந்த பொங்கல் தொகுப்பில் வெல்லம், பச்சரிசி போன்ற பொருட்களின் தரம் குறைவாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. அதன் எதிரொலியாக தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக்கட்டுப்பாட்டு மேலாளர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஏற்பட்ட கசப்பான அனுபவம் இந்த ஆண்டில் நடந்துவிடக்கூடாது என்பதற்காக வரும் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்குப் பதிலாக ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் மனநிலையில் தமிழக அரசு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுவரையில் தமிழக அரசு சார்பில் கரும்பு கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்த தகவலில் உண்மை இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு வழங்குவது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.

மக்கள் மனநிலை

அதே நேரத்தில் பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு கிடைக்குமா? ரொக்க பணம் கிடைக்குமா? அல்லது இரண்டும் சேர்ந்து கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மனதில் எழுந்து இருக்கிறது. இதுபற்றி பல்வேறு தரப்பினர் தங்களது கருத்துகளை பதிவு செய்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன்:-

பொங்கல் பண்டிகை என்பது உழவர் திருநாள். விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் உகந்த பண்டிகை ஆகும். புத்தரசியில் பொங்கலிட்டு வேளாண்மை சார்ந்த உற்பத்தி பொருட்களையே வணங்குகிறோம்.

எனவே தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த பொருட்கள் இடம் பெற்றன. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புக்கான பொருட்களை வெளிமாநிலத்தில் கொள்முதல் செய்ததால் குளறுபடி, முறைகேடுகள் அரங்கேறின.

இதனை காரணமாக காட்டி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்புக்கு பதிலாக ரொக்க பணமாக தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது ஏற்புடையது அல்ல. தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துவிட்டு விவசாயிகள் மீது குறை சொல்லி தப்பிக்க பார்க்க கூடாது.

எனவே ரொக்க பணம் வழங்குவதற்கு பதிலாக பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.

பொருளும், ரொக்கமும் வேண்டும்

கண்ணாத்தாள் செல்வம் (நத்தம்) :- பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் முன்பு ரொக்க பணம் வழங்கப்பட்டது. அது சாதாரண குடும்பங்களுக்கு பொங்கல் கொண்டாட்டத்துக்கு உதவியாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு பொங்கல் பொருட்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. அது பொங்கல் பண்டிகைக்கு மட்டுமின்றி அதன்பின்னரும் பல நாட்கள் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டது. அடித்தட்டு மக்களுக்கு 21 வகை பொருட்களும் 21 நாட்களுக்கு மேல் பயன் தந்தது. எனவே பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணத்துடன், பொங்கல் பொருட்கள் தொகுப்பையும் வழங்கினால் பல குடும்பங்கள் மகிழ்ச்சி அடையும்.

முத்துபாப்பா (கோபால்பட்டி) :- கொரோனா காலம் முடிந்து விட்டாலும் கிராமங்களில் இன்னும் முழுமையான வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. அதேபோல் அனைத்து பொருட்களின் விலைவாசியும் கடுமையாக உயர்ந்துவிட்டது. இதனால் சாதாரண ஏழை மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சிரமப்படும் நிலையில் தான் இருக்கின்றனர். எனவே தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்கு ரொக்க பணமாக வழங்க வேண்டும். மேலும் அதை முன்கூட்டியே வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஜோதிமணி (திண்டுக்கல்) :- பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ரொக்க பணம் வழங்குமா? அல்லது பொங்கல் பொருட்களை அடங்கிய தொகுப்பை வழங்குமா? என்பது மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பொங்கல் பொருட்கள் மட்டுமின்றி ரொக்க பணமும் வழங்கினால் பல குடும்பங்களின் பொங்கல் கொண்டாட்டத்திற்கு உதவியாக இருக்கும். சாதாரண குடும்பங்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட அரசை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதை நிறைவேற்றும் வகையில் பொங்கல் பரிசு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ரேஷன் அட்டை வைத்துள்ள பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், ரூ.1,000 ரொக்க பணமும் சேர்த்து வழங்க வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஓரிரு நாட்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தித்திப்பான அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story