பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் - பூங்கா நிர்வாகம்


பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் - பூங்கா நிர்வாகம்
x

பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செங்கல்பட்டு

வண்டலூர் உயிரியல் பூங்கா

பொங்கல் விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாட வண்டலூர் உயிரியல் பூங்கா முக்கியமான இடங்களில் ஒன்றாகும். கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக பூங்கா பார்வையாளர்களுக்கு மூடப்பட்டது. தற்போது நிலைமை சீரான நிலையில், இந்த ஆண்டு பொங்கல் வருகை அதிக அளவில் இருக்குமென்பதால் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய உயிரியல் பூங்கா நிர்வாகம் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

நுழைவு சீட்டு வழங்கப்படும் இடத்தில் பொதுமக்களிடையே நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 20 டிக்கெட் கவுன்டர்கள் முழுமையாக செயல்படுவதோடு, ஏ.டி.எம். கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதியும் வழங்கப்படும்.

ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு

மேலும், ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு சிறப்பு கவுண்ட்டர் அமைக்கப்படும். பார்வையாளர்களை வரிசையில் சீராகவும், விரைவாகவும் அனுப்ப ஒவ்வொரு டிக்கெட் கவுண்ட்டருக்கும் சவுக்கு கம்பு மூலம் தடுப்பு அமைக்கப்படும். நுழைவு சீட்டு வழங்கிய பிறகு பூங்காவுக்கு பார்வையாளர்கள் விரைவாக செல்வதற்கு ஒரே நேரத்தில் 10 வரிசைகளில் சோதனை செய்யப்பட்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பூங்கா நுழைவு வாயிலிலேயே போலீஸ் துறையின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்படும். மேலும் 3 இடங்களில் மெட்டல் டிடெக்டர்கள் நிறுவப்படும்.

வாகனங்கள் நிறுத்துவதற்கு. பூங்கா வாகன நிறுத்துமிட பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டு சமன் செய்யப்பட்டு. வாகனங்கள் நிறுத்த அடையாள கோடுகளால் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருகில் உள்ள கிரசன்ட் என்ஜினீயரிங் கல்லூரியில் கூடுதல் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறுத்துமிடத்திலிருந்து பூங்கா நுழைவாயிலுக்கு பார்வையாளர்களை அழைத்து வர 7 மினி பஸ் மற்றும் பூங்கா வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் விடுமுறை நாட்களில், பார்வையாளர்களின் வசதிக்காக வண்டலூர் வழித்தடத்தில் கூடுதலாக 150-ற்கும் மேலான பஸ்களை இயக்க மாநகர போக்குவரத்து மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மணிக்கட்டு பட்டை

8 வயதுக்குட்பட்ட சிறியவர்கள் காணாமல் போகும் சூழ்நிலைகளை தவிர்க்க சிறியவர்களின் கைகளில் மணிக்கட்டு பட்டை கட்டப்படும். அதில் பெற்றோர்களின் செல்போன் எண்கள் எழுதப்படும். கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில், போலீஸ்துறை ஊழியர்களுடன் கண்காணிப்பு கேமரா ஆபரேட்டர்கள் தொடர்ந்து கண்காணித்து, குழந்தை காணாமல் போகும் சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், குழந்தைகளை கண்டறிவதில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்.

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்படும். வருகிற 16 மற்றும் 17-ந்தேதிகளில் பார்வையாளர்களுக்காக சிறப்பு உதவி மையம் மற்றும் மருத்துவ உதவி மையம் பூங்காவின் பல்வேறு இடங்களில் அமைக்கப்படும்.

குடிநீர் வசதி

மருத்துவ குழுவுடன் 4 எண்ணிக்கையிலான ஆம்புலன்ஸ் சேவை மற்றும் ஒரு தீயணைப்பு வாகனம் உயிரியல் பூங்காவுக்குள் எந்த அவசர சூழலையும் கையாள நிறுத்தப்படும். பூங்காவில் உள்ள கழிவறைகளுடன், கூடுதலாக 15 எண்ணிக்கையிலான உயிரி கழிவறைகள் பூங்காவின் பல்வேறு இடங்களில் வைக்கப்படும். தடையில்லா மின்சாரம் மற்றும் பார்வையாளர்களுக்காக கூடுதலாக 23 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட

குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் விடுமுறை நாட்களில் பூங்காவுக்குள் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து ஒழுங்குமுறை, நகை பறிப்பு மற்றும் பர்ஸ் திருட்டு போன்ற குற்ற செயல்களைத் தவிர்க்கும் பொருட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சென்னை, வேலூர் மற்றும் விழுப்புரம் மண்டலங்களில் இருந்து 100 எண்ணிக்கையிலான வனத்துறையை சேர்ந்த சீருடை பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் கல்லூரியை சேர்ந்த என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ். மாணவர்கள் உள்பட 100 பேர் பார்வையாளர்களுக்கு வழிகாட்டும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விலங்குகளின் பாதுகாப்பு

விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் விலங்குகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும்எடுக்கப்பட்டுள்ளன. ஊன்உண்ணி விலங்கு இருப்பிடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிக்காக சீருடை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வையாளர்களுக்காக கூடுதல் அங்கீகரிக்கப்பட்ட குத்தகை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வருகிற 17-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) காணும் பொங்கலன்று பார்வையாளர்களுக்காக பூங்கா திறக்கப்படும். பூங்கா நுழைவு பகுதி மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் இலவச வைப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் வெளியேற 2 தனித்தனி வழிகள், ஒரு வழி பஸ் நிலையம் செல்வதற்க்கும், மற்றொன்று கார் பார்க்கிங் செல்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவல் வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story