கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை


கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 July 2023 7:00 PM GMT (Updated: 13 July 2023 7:00 PM GMT)
நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

பாலதண்டாயுதபாணி கோவில்

நாமக்கல்- மோகனூர் சாலை காந்திநகரில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆனிமாத கிருத்திகையை முன்னிட்டு சாமிக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் கூலிப்பட்டி முருகன் கோவில், கரையாம்புதூர் முருகன் கோவில் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

வடபழனியாண்டவர் கோவில்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆனி மாத கிருத்திகையையொட்டி நேற்று முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன்படி கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணியசாமி கோவில், பிராந்தகத்தில் 34.5 அடி உயரம் உள்ள ஆறுமுகக்கடவுள் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், பொத்தனூர் அருகே பச்சமலை முருகன் கோவில், அனிச்சம்பாளையத்தில் வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது.

பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர் கோவில், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள சுப்ரமணியர், ராஜா சாமி கோவிலில் ராஜா சாமி, பேட்டை பகவதியம்மன் கோவிலில் முருகன், கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் பாலமுருகன் மற்றும் கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மலையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

காந்தமலை முருகன்

இதேபோல் மோகனூர் காந்தமலை முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து முருகன் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பாலப்பட்டி கதிர்மலை முருகன் கோவிலில் கிருத்திகையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேட்டுவம்பாளையம் அனந்தபுரத்து முருகனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story