கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு


கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்த வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு
x

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கருணாநிதி சிலை அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், 'திருவண்ணாமலை கிரிவலப் பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்குச் சொந்தமான 92.5 அடி நிலத்தை ஜீவா கல்வி அறக்கட்டளை வாங்கியுள்ளது.

இந்த நிலத்துக்கு அருகில் உள்ள நீர் போக்குவரத்து நிலத்தை ஆக்கிரமித்து, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதி சிலை அமைக்க உள்ளனர். இந்தச் சிலையை அமைத்தால், கிரிவலம் செல்லும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.

தடை விதிப்பு

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, விரிவான பதில் அளிக்க திருவண்ணாமலை கலெக்டர், ஜீவா கல்வி அறக்கட்டளை நிர்வாகி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டது. மேலும், சிலை அமைக்க இடைக்கால தடையையும் விதித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், முகமது சபீக் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த தடையை நீக்கக்கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல கலெக்டரும் பதில்மனு தாக்கல் செய்தார். அந்த இரு மனுக்களிலும், ஆக்கிரமிக்கப்பட்டதாக மனுதாரர் கூறும் நிலம் பட்டா நிலம் ஆகும் என்று கூறியிருந்தனர்.

விவரங்கள் இல்லை

மேலும் அதில், 'அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்தவர் யார் என்ற விவரங்களை கூறாமல், சென்னையை சேர்ந்த மனுதாரர் இந்த பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்' என்று கூறப்பட்டிருந்தது. இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.


Next Story