தீவனம் விரயமாவதை தடுக்க உயர்ந்த கோழிப்பண்ணைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும்

தீவனம் விரயமாவதை தடுக்க உயர்ந்த கோழிப்பண்ணைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:
தீவனம் விரயமாவதை தடுக்க உயர்ந்த கோழிப்பண்ணைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 1 மி.மீட்டரும், நாளை (வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) தலா 2 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்று 8 கி.மீ. வேகத்தில் தென்மேற்கு திசையில் இருந்து வீசும்.
வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 80 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40 சதவீதமாகவும் இருக்கும்.
தீவனம் விரயம்
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் காற்றின் வேகம் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதால், தீவனத்தை வீணடிக்காமல் பாதுகாத்து கொள்ளும் வியூகங்களில் பண்ணையாளர்கள் ஈடுபட வேண்டும். இன்னும் 2 மாதங்களுக்கு அதிக காற்றின் வேகம் கொண்ட வானிலை நிலவும். தீவன விரயத்தை தடுக்க தீவனத்தில் சிறிது அளவு தாவர எண்ணெய் சேர்க்கலாம்.
இதனால் மதிப்புள்ள வைட்டமின் சத்து போன்றவை காற்றில் பறந்து செல்வதை தடுக்க முடியும். மேலும் உயர்மனைகளில் பக்கவாட்டில் படுதாவை கட்ட வேண்டும். நாட்டுக்கோழிகளை பொறுத்த வரையில் வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே நாட்டுக்கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.






