கோழிப்பண்ணை தொழில் நலிவடையாமல் தடுக்கபண்ணையாளர்கள் ஒற்றுமையாக


கோழிப்பண்ணை தொழில் நலிவடையாமல் தடுக்கபண்ணையாளர்கள் ஒற்றுமையாக
x

முட்டை விலை சரிவால் கோழிப்பண்ணை தொழில் நலிவடையாமல் தடுக்க, பண்ணையாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

நாமக்கல்

முட்டை விலை சரிவு

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த நிலையில் இந்தியா முழுவதும் முட்டை உற்பத்தி அதிரித்து உள்ளதால், முட்டை விலை வீழ்ச்சியடைய தொடங்கியது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முட்டையின் கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்தது. தற்போது அது படிப்படியாக குறைந்து, 440 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

ஆனால் பண்ணைகளில் ஒரு முட்டையின் கொள்முதல் விலை ரூ.4-க்கும் குறைவாக உள்ளது. கோழித்தீவன மூலப்பொருட்களின் விலை உயர்ந்து, ஒரு முட்டையின் உற்பத்தி செலவு 450 காசுகளுக்கு மேல் ஆகும் நிலையில், ரூ.4-க்கும் குறைவாக முட்டையின் விற்பனை விலை உள்ளதால், கோழிப்பண்ணை தொழிலில் நாள்தோறும் சுமார் ரூ.3 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டு, பல பண்ணையாளர்கள் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் கோழிப்பண்ணை தொழிலை நலிவடையாமல் காப்பாற்ற எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு சார்பில், பண்ணையாளர்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மண்டல துணைத்தலைவர் சிங்கராஜ், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க செயலாளர் சுந்தரராஜ், முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பேசிய பண்ணையாளர்கள், என் முட்டை என் விலை என்ற நோக்கத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு தோற்றுவிக்கப்பட்டது. இதன் மூலம் பண்ணையாளர்கள் முட்டைக்கான விலையை நிர்ணயிக்க வழிவகை செய்யப்பட்டது. ஆனால் தற்போது தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு அறிவிக்கும் விலையில் இருந்து எவ்வளவு குறைத்து வாங்க வேண்டும் என்று முட்டை வியாபாரிகள் முடிவு செய்கின்றனர். எனவே முட்டை விலையை நிர்ணயிப்பது வியாபாரிகள் தான். இதை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

16 குழுக்கள் அமைப்பு

இதற்கு பதில் அளித்து தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு சார்பில் பேசிய நிர்வாகிகள் கூறியதாவது:-

பண்ணையாளர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், ஏற்கனவே தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு சார்பில் அறிவிக்கப்பட்ட விலைக்கு குறைவாக யாரும் முட்டையை விற்பனை செய்யக் கூடாது என முடிவு செய்யப்பட்டு அந்த விலை சுமார் ஒரு ஆண்டு கடைபிடிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக மைனஸ் விலை அறிமுகம் செய்யப்பட்டது. இதற்கு பண்ணையாளர்களிடம் ஒற்றுமை இல்லாததே காரணம்.

இப்போதும் நெஸ்பேக் அமைப்பு அறிவிக்கும் மைனஸ் விலைக்கும், அதிகமான மைனஸ் விலையில், பண்ணையாளர்கள் யாரும் முட்டை விற்பனை செய்யாமல் ஒத்துழைத்தால், அடுத்து விரைவில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு நிர்ணயிக்கும் விலைக்கே நாம் முட்டையை விற்பனை செய்ய முடியும். இதை அமல்படுத்த 16 குழுக்கள் அமைத்து முட்டைகளை விலை குறைத்து விற்பனை செய்யாமல் இருக்க கண்காணிக்கப்படும். இதற்கு அனைத்து பண்ணையாளர்களும் ஒத்துழைக்க வேண்டும். அப்படி ஒத்துழைத்தால் மட்டுமே பண்ணைகளை நலிவடையாமல் காப்பாற்ற முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

1 More update

Next Story