முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடிய 10 பேரின் மின் இணைப்பு துண்டிப்பு


முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடிய 10 பேரின் மின் இணைப்பு துண்டிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2023 9:00 PM GMT (Updated: 25 Jun 2023 11:44 AM GMT)

கூடலூர் அருகே முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடிய 10 பேரின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது

தேனி

தமிழக-கேரள எல்லையில் உள்ள முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு பாசனத்திற்கும், குடிநீருக்காகவும் தற்போது வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை சிலர் மின் மோட்டார் மூலம் திருடி வருகின்றனர். இதனால் ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் வைகை அணைப்பகுதிக்கு முழுமையாக செல்வதில்லை என்று புகார் எழுந்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில் பொதுப்பணி துறை மற்றும் மின்வாரிய துறை அதிகாரிகள் இணைந்து முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடுபவர்களை கண்டறிந்து அவர்களின் மின் இணைப்பை துண்டிக்க முடிவு செய்தனர்.

அதன்படி, நேற்று முன்தினம் பொதுப்பணி துறை உதவிபொறியாளர் பிரேம்குமார் தலைமையிலான அதிகாரிகள், மின்வாரியம் மற்றும் போலீஸ் துறையுடன் இணைந்து குள்ளப்பகவுண்டன்பட்டி முதல் கருநாக்கமுத்தன்பட்டி வரை முல்லைப்பெரியாற்றில் சோதனை நடைபெற்றது. அப்போது மின் மோட்டாரை பயன்படுத்தி முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திருடியதாக 10 பேர் கண்டறியப்பட்டனர். இதையடுத்து உடனடியாக அவர்களது மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கை நாளை (திங்கட்கிழமை) வரை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story