தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி

ராசிபுரம்:
ராசிபுரம் அருகே உள்ள நாமகிரிப்பேட்டை வட்டார வள மையத்திற்குட்பட்ட குடியிருப்புகளில் முற்றிலும் எழுத படிக்க தெரியாதவர்களுக்கு அடிப்படை கல்வியை கற்பிக்க பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் இயக்கம் சார்பில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்பட்டு வருகிறது.
இந்த மையங்களில் ஆசிரியராக பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு வாழ்வியல் திறன் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செண்பக வடிவு தொடங்கி வைத்தார். தன்னார்வ ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேலும் வலுவூட்டும் வகையில் வாழ்வியல் திறன் சார்ந்த கருத்துக்கள், உடல்நலம் மற்றும் சுகாதாரம் குறித்த கருத்துக்களை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தயாசங்கர் பேசினார். சட்டம் சார்ந்த கல்வி அறிவு, மகளிர் சுய உதவிக்குழு, குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மற்றும் திறன் மேம்பாடு குறித்து தன்னார்வலர்களுடன் விவாதிக்கப்பட்டது. இதில் 66 தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரன் செய்திருந்தார்.






