சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

அரியலூர்

பிரகதீஸ்வரர் கோவில்

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள கங்கைகொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதோஷ விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நந்திபெருமானுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், தேன், திரவியபொடி மாவுப்பொடி உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது. இதையடுத்து, ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோவில், சின்னவளையம், பாப்பாக்குடி, மீன்சுருட்டி ஆகிய ஊர்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் மீன்சுருட்டியில் உள்ள சொக்கலிங்கேஸ்வரர் சிவன் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

பயறணீஸ்வரர் கோவில்

உடையார்பாளையம் பயறணீஸ்வரர் கோவிலில் உள்ள நந்திபெருமானுக்கு பால், தயிர், இளநீர், திரவியபொடி, பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் நந்தி பெருமானுக்கு வஸ்திரம் சாத்தப்பட்டு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் உடையார்பாளையம் தெற்கு தட்டார தெருவில் உள்ள காமூண்டீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவதாண்டேஸ்வர் கோவில்

செந்துறையில் பழமை வாய்ந்த சிவதாண்டேஸ்வர் கோவிலில் பிரதோஷ வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி உமாபதி குருக்கள் தலைமையில் கோமாதா பூஜை தொடங்கியது. பின்னர் மூலவர் மற்றும் நந்தி பகவானுக்கு 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காளை வாகனத்தில் பெரியநாயகி உடனுறை சிவதாண்டேஸ்வரர் பிரஹார வலம் வந்த போது 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிவ கோஷம் முழங்கி சுவாமியை தரிசனம் செய்தனர்.

விசாலாட்சி அம்மன்

தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் மகா பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி விஸ்வநாதர், விசாலாட்சி அம்மன் மற்றும் நந்தியம்பெருமானுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப்பொடி, வில்வப்பொடி, அருகம்புல் பொடி, பால், தயிர், சந்தனம், தேன், இளநீர், கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதைத்தொடர்ந்து பிரதோஷ நாயகர்கள் அலங்கரிக்கப்பட்டு திருமுறைகள், சிவபுராணம் முழங்க கோவிலில் பிரதட்சணம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பிரதோஷ வழிபாட்டு குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதேபோல் தா.பழூர் அருகே உள்ள காரைக்குறிச்சி சவுந்திரநாயகி அம்மன் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி அம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் கோவில், நாயகனைப்பிரியாள் மரகதவல்லி தாயார் உடனுறை மார்க்கசகாயேஸ்வரர் கோவில், மதனத்தூர் ராமலிங்கேஸ்வரர் கோவில், அருள்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சுவாமி, அம்பாள், நந்திபெருமானுக்கு வாசனை திரவியங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

கைலாசநாதர் கோவில்

அரியலூர் கைலாசநாதர் கோவிலில் உள்ள சிவலிங்கம் மற்றும் நந்திக்கு சீகைக்காய், மஞ்சள் தூள், பச்சரிசி மாவு, பால், தயிர், சாத்துக்குடி, எலுமிச்சை, இளநீர், கரும்பு சாறு உள்ளிட பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல் ஆலந்துறையார் திருக்கோவில், காசி விஸ்வநாதர் கோவில், சக்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story