சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு


சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:46 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர்

கூத்தாநல்லூர்:

திருவாரூர் மாவட்டத்தில் சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பிரதோஷ வழிபாடு

கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ருத்ரகோடீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக ருத்ரகோடீஸ்வரருக்கும், நந்தி பகவானுக்கும் 108 லிட்டர் பால் மற்றும் தயிர், சந்தனம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், மஞ்சள் பொடி மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சதுரங்கவல்லபநாதர்

திருநாவுக்கரசரால் தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம் அருகே உள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோவிலில் குருவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர், நந்திகேஸ்வரர் சன்னதிகளில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவிலில் குருவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் விசாலாட்சி சமேத காசிவிசுவநாதர், பிரதோஷ நாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பூவனூர் கல்யாணி அம்மன் சமேத கைலாசநாதர் கோவில், நீடாமங்கலம் கோகமுகேஸ்வரர் கோவில், நரிக்குடி எமனேஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் குருவார பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது.

ஞானபுரீஸ்வரர்

திருமக்கோட்டை ஞானபுரீஸ்வரர் கோவிலில் புரட்டாசி மாத கடைசி பிரதோஷத்தை முன்னிட்டு ஞானபுரீஸ்வரருக்கும், நந்திக்கும் பாலாபிஷேகம், பன்னீர் அபிஷேகம், சந்தன அபிஷேகம், இளநீர் அபிஷேகம், திரவியப்பொடி அபிஷேகம் உள்ளிட்ட அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து ஒரே நேரத்தில் சிவனுக்கும், நந்திகேஸ்வரருக்கும் தீபாராதனை காட்டப்பட்டது.

வீழிநாத சாமி கோவில்

குடவாசல் அருகே உள்ள திருவீழிமிழலை வீழிநாத சாமி கோவிலில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. அப்போது நந்தி பகவானுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்றவற்றால் சிறப்பு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இதேபோல் குடவாசல் கோணேஸ்வரர் கோவில், சத்ரு சம்ஹார மூர்த்தி கோவில், கூந்தலூர் ஜம்புகாரண்யேஸ்வரர் கோவில், சற்குணேஸ்வரபுரம் சற்குணேஸ்வரர் கோவில், திருப்பாம்புரம் ஷேசபுரீஸ்வரர் கோவில், சீதக்கமங்கலம் மூலநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நந்தி பகவானுக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது.

கைலாசநாதர் கோவில்

வடுவூர் வடபாதியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தையொட்டி மூலவர் மற்றும் வடிவழகி அம்மன்னுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. பாமணி நாகநாதசாமி கோவிலில் மூலவர் நாகநாதர் சாமிக்கு கவசம் அணிவித்து அலங்கரித்து இருந்தனர். அதனை தொடர்ந்து நந்தி பெருமானுக்கு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதே போல பரவாக்கோட்டை நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.


Next Story