பொற்றாமரை குளத்தில் பூர்வாங்க பூஜைகள்


பொற்றாமரை குளத்தில் பூர்வாங்க பூஜைகள்
x

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தெப்ப உற்சவம்: பொற்றாமரை குளத்தில் பூர்வாங்க பூஜைகள்

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் தெப்ப உற்சவத்தை முன்னிட்டு பொற்றாமரை குளத்தில் பூர்வாங்க பூஜைகள் நடந்தன.

சாரங்கபாணி கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக இக்கோவில் போற்றப்படுகிறது. சோழ நாட்டு 12-வது திருத்தலம் ஆகும். இக்கோவில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாக கருதப்படும் பெருமையுடையது.

இங்கு ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்து வருகிறார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. இங்கு மாசி மகம் அன்று கோவில் அருகே உள்ள பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுவது வழக்கம்.

பூர்வாங்க பூஜைகள்

இதை முன்னிட்டு வருகிற 1-ந் தேதி அனுக்ஞை பூஜை, 2-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை பெருமாள் உபயநாச்சியாருடன் பிரகார புறப்பாடும், சடாரி திருமஞ்சனமும் நடக்கிறது. மாசி மகத்தையொட்டி வருகிற 6-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் யாத்ரா தானம் கண்டருளி, திருவீதி புறப்பாடும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அன்றைய தினம் பொற்றாமரை குளத்தில் தெப்ப உற்சவம் காலையில் 1 சுற்றும், இரவு மின்னொளி அலங்காரத்தில் 2 சுற்றும் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு பொற்றாமரை குளத்தில் தெப்பம் கட்டுவதற்கான பூர்வாங்க பூஜைகள் நேற்று முன்தினம் நடந்தன.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிவசங்கரி மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story