சிசு மரணங்களை தடுக்க பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்


சிசு மரணங்களை தடுக்க  பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும்
x

சிசு மரணங்களை தடுக்க பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு பாதுகாக்க வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் டாக்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சிசு மற்றும் மகப்பேறு மரணத்தை தடுப்பது குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

மருத்துவ உதவிகள்

மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பிரசவங்கள் நடைபெறுகிறது. மார்ச்-2022 முதல் மே-2022 வரை உள்ள மாதங்களில் நடைபெற்ற 17 சிசு மரணம் மற்றும் 1 மகப்பேறு மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட டாக்டர்களிடம் ஆய்வறிக்கை பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இனிவரும் காலங்களில் பிரசவத்தின்போது சிசு மரணம் ஏற்படாதவாறு டாக்டர்கள் தேவையான அனைத்து மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி கவனமுடன் மேற்கொள்ள வேண்டும்.சிசு மரணத்தை தடுக்க பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமி தொற்று ஏற்படாதவாறு தொடர் கண்காணிப்புகளை டாக்டர்கள் மற்றும் தாய்மார்கள் மேற்கொள்ள வேண்டும்.

கடும் நடவடிக்கை

மகப்பேறு மருத்துவம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகளில் தரமாகவும், சிறப்பாக இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் கருக்கலைப்புகள் சட்டப்பூர்வமற்ற இடங்களில் மேற்கொள்ளாமல் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவரின் உரிய ஆலோசனையின்படி மேற்கொள்ள வேண்டும். அரசு விதிமுறைகளை மீறி கருக்கலைப்புகளில் ஈடுபடும் மருந்தகங்கள், தனியார் மருத்துவமனைகள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனிக்கவனம் செலுத்தி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிசு மற்றும் மகப்பேறு மரணம் முற்றிலும் தவிர்க்கப்படுவதற்கு அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள், கர்ப்பிணிகள் மீது தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை வழங்க வேண்டும். மகப்பேறுக்கு பின் பச்சிளம் குழந்தைகளுக்கு கிருமித்தொற்று ஏற்படாதவாறு டாக்டர்கள் மருத்துவப்பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்.

கூட்டத்தில் இணை இயக்குனர்(மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) பாலச்சந்தர், துணை இயக்குனர்(சுகாதார பணிகள்) பூங்கொடி, அனைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள், நிலைய மருத்துவ அலுவலர்கள், தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் கலந்துகொண்டனர்.


Next Story