ஆனைமலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரம்

ஆனைமலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனைமலை
ஆனைமலையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
டெங்கு தடுப்பு பணிகள்
ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இந்தநிலையில் இந்தப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் ஒருசிலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து ஆனைமலை பேரூராட்சி நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் இணைந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் வீடு, வீடாக டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி வருகிறார்கள். தண்ணீர் தொட்டிகளில் கிருமி நாசினி மருந்து ஊற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-
தண்ணீர் தொட்டிகளில் மழைநீரை தேக்கி வைப்பதால் டெங்கு காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் பரப்பும் ஏ.டி.எஸ். வகை கொசு உற்பத்தியாக வாய்ப்பு உள்ளது. இந்த வகை கொசுக்கள் நல்ல தண்ணீரில் மட்டும் முட்டையிட்டு, ஒரு வாரத்தில் டெங்கு, ஜிகா வைரஸ் கொசுக்களாக மாறி விடுகின்றன.
கிருமி நாசினியால் சுத்தம்
எனவே வாரம் ஒரு முறை குடிநீர் தொட்டிகள் மற்றும் நீர் தேங்கும் இடங்களை கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும். வீட்டில் தொட்டிகள், குளிர்சாதன பெட்டிகள், குளிர்பதன பெட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில், தேங்காய் சிரட்டை, பழைய டயர், ஆட்டுக்கல் போன்றவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் ஏற்பட்டால் ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை தட்டு அணுக்களின் எண்ணிக்கை அதிவிரைவாக குறைந்து உள் உறுப்புகளில் ரத்த கசிவு ஏற்படும். எனவே காய்ச்சல், வாந்தி, தோலில் தடிப்புகள், உடல் வலி மற்றும் மூட்டு வலி போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அல்லது சுகாதார நிலையங்களுக்கோ சென்று உடனடியாக பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






