விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி


விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி
x

வெண்ணந்தூர் பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாமக்கல்

வெண்ணந்தூர்

விளைச்சல் அதிகரிப்பு

வெண்ணந்தூர் அடுத்த நடுப்பட்டி, ஓ சவுதாபுரம், அக்கரைப்பட்டி, மதியம்பட்டி, மின்னக்கல், நாச்சிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது மழை அதிகளவு பெய்ததால் வெண்டைக்காய் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதனால் எதிர்பார்த்ததை விட வெண்டைக்காய் மகசூல் நன்றாக இருந்தது. விளைச்சல் அமோகமாக இருந்ததால் விலையும் கூடுதலாக கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் வரத்து அதிகரித்ததால் வெண்டைக்காய் விலையை வியாபாரிகள் குறைத்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

விலை வீழ்ச்சி

இதுகுறித்து நாச்சிப்பட்டி விவசாயி முனுசாமி கூறியதாவது:-

இந்த ஆண்டு எதிர்பார்த்ததை விட மழை அதிகளவு பெய்ததால் வெண்டைக்காய் இப்பகுதியில் அதிகம் சாகுபடி செய்தனர். இதனால் விளைச்சல் நன்கு இருந்தது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வெண்டைக்காய் ஒரு கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனையானது. தற்போது ஒரு கிலோ ரூ.6 முதல் ரூ.10 வரை மட்டுமே விற்பனை ஆகிறது. அதிக விளைச்சல் இருந்தும், விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

தக்காளிக்கு கிடைத்தது போன்று விலை கிடைக்காவிட்டாலும் வழக்கமான விலை கூட கிடைக்கவில்லை என விவசாயிகள் கூறுகின்றனர். தற்போது விற்பனையாகும் விலையை வைத்து வெண்டைக்காய் பறிக்கும் தொழிலாளர்களுக்கு தான் கூலி கொடுக்க முடியும். போதிய விலை இல்லாததால் வெண்டைக்காய் அறுவடை செய்வதை தற்காலிகமாக விவசாயிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story