வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி


வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி
x

வரத்து அதிகரிப்பால் பூக்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கரூர்

கரூர் மாவட்டம் நொய்யல், சேமங்கி, வேட்டமங்கலம், பேச்சிப்பாறை நடையனூர், பழமாபுரம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்குநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குண்டுமல்லி, முல்லை, காக்கட்டான், சம்பங்கி, சாமந்திப்பூ, அரளி, ரோஜா உள்ளிட்ட பல்வேறு பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் பூக்கும் தருவாய்க்கு வரும்போது கூலி ஆட்கள் மூலம் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் செயல்பட்டு வரும் பூ மார்க்கெட்டிற்கும் கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த சில வாரங்களாக பூ விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. கோடை காலம் தொடங்கி, வெயில் அதிகரித்துள்ளதால் பூக்களின் விளைச்சல் அதிகரித்துள்ளது.

கடந்த வாரம் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.600-க்கும், முல்லை ரூ.600-க்கும், காக்கட்டான் ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.200-க்கும், அரளி ரூ.200-க்கும், சாமந்திப்பூ ரூ.150-க்கும், ரோஜா ரூ.200-க்கும், செவ்வந்தி ரூ.250-க்கும் விற்பனையானது. நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.300-க்கும், முல்லை ரூ.300-க்கும், காக்கட்டான் ரூ.200-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.80-க்கும், சாமந்திப்பூ ரூ.80-க்கும், ரோஜா ரூ.150-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் விற்பனையானது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கோடை காலம் துவங்கியவுடன் பூக்கள் விளைச்சல் அதிகரிக்கும் அதனால் பூக்களின் வரத்து அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் குண்டு மல்லி பூ மேலும் விலை சரிவடையும். கடந்த ஜனவரி மாதத்தில் குண்டு மல்லி பூ கிலோ ரூ.3 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது கிலோ ரூ.300-க்கு விலை சரிந்துள்ளது. இதனால் பூக்கள் பயிரிட்டுள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story