பூக்கள் விலை கடும் உயர்வு


பூக்கள் விலை கடும் உயர்வு
x

கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிைகப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ராணிப்பேட்டை

கடும் பனிப்பொழிவு காரணமாக வரத்து குறைந்ததால் நேதாஜி மார்க்கெட்டில் பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிைகப்பூ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.

நேதாஜி பூ மார்க்கெட்

நேதாஜி மார்க்கெட் வளாகத்தில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மொத்தம் மற்றும் சில்லரை விற்பனை பூக்கடைகள் உள்ளன. நேதாஜி மார்க்கெட்டிற்கு பெங்களூரு, வி.கோட்டா, குப்பம், கடப்பா, ஓசூர், சேலம், தா்மபுரி மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மல்லிகை, முல்லை, கேந்தி, ரோஜா, சாமந்தி, கனகாம்பரம், கோழிகொண்டை உள்ளிட்ட பலவகையான பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த மார்க்கெட்டிற்கு தினமும் 10 முதல் 12 டன் வரை பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அதேபோன்று 10 டன் பூக்கள் மொத்தம் மற்றும் சில்லரை விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை அதிகமாக காணப்படும். பனி மற்றும் மழைக்காலங்களில் பூக்களின் வரத்து குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து உச்சத்தில் காணப்படும்.

மல்லிைகப்பூ கிலோ ரூ.2 ஆயிரம்

நேதாஜி பூ மார்க்கெட்டில் கடந்த சில நாட்களாக பூக்களின் விலை கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. நேற்று அதிகபட்சமாக மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதேபோன்று மற்ற பூக்களின் விலையும் அதிகரித்து காணப்பட்டது. கடந்த வாரம் கிலோ ரூ.700-க்கு விற்பனையான முல்லை தற்போது ரூ.1,200 முதல் ரூ.1,500-க்கும், ரூ.500-க்கு விற்ற ஜாதிமல்லி ரூ.1,000-க்கும், ரூ.600-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.1,000-க்கும், ரூ.40, ரூ.50-க்கு விற்ற சாமந்தி ரூ.80, ரூ.100-க்கும், ரூ.100-க்கு விற்ற பெங்களூரு ரோஜா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல பகுதிகளில் பலத்தமழை பெய்தது. அதனால் பூக்களின் வரத்து குறைந்தது. தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதனால் பூக்களின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, மேலும் வரத்து குறைந்துள்ளது. அதனால் நேதாஜி பூ மார்க்கெட்டில் விலை கடுமையாக அதிகரித்துள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story