ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம்:கைதான பாதிரியார் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்


ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரம்:கைதான பாதிரியார் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்
x
தினத்தந்தி 24 March 2023 6:45 PM GMT (Updated: 24 March 2023 6:46 PM GMT)

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குமரி மாவட்ட பாதிரியார் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

ஆபாச வீடியோக்கள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட குமரி மாவட்ட பாதிரியார் பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டார்.

ஆபாச வீடியோவில் பாதிரியார்

குமரி மாவட்டம் கொல்லங்கோட்டை அடுத்த சூழால் அருகில் உள்ள குடையால்விளை பாத்திமாநகரைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் குமரி மாவட்டத்தில் உள்ள சில ஆலயங்களில் பணியாற்றியுள்ளார்.

இந்தநிலையில் இவர் இளம்பெண்களுடன் நெருக்கம், ஆபாசமான வாட்ஸ்-அப் சாட்டிங், வீடியோ காலில் பதிவான நிர்வாண காட்சிகள் போன்றவை சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்ததாக பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் 5 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றம்

பின்னர் நாகர்கோவில் பார்வதிபுரம் பகுதியில் பதுங்கியிருந்த போது பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை செய்த பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு கோர்ட்டு உத்தரவின்பேரில் 15 நாள் காவலில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்குஅடைக்கப்பட்டார். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் அவர் நாகர்கோவில் சிறையில் இருந்து பாளையங்கோட்டை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

செல்போனை கைப்பற்ற தீவிரம்

இதற்கிடையே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போனுடன் தலைமறைவான நபரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பாதிரியாருடன் இளம்பெண்கள் இருப்பது போன்ற வீடியோ காட்சிகளை தொடர்ந்து பரப்பியவர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரள பகுதியிலும் முகாமிட்டு தேடி வருகிறார்கள்.

பாதிரியார் மீதான வழக்கில் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ள பெண்களிடம் இருந்து வாக்குமூலம் பெறும் நடவடிக்கையையும் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.


Next Story