ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தப்படும்


ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஏற்படுத்தப்படும்
x

கைனூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்று ஊராட்சி மன்ற தலைவர் ஜி.உமாமகேஸ்வரி கோவிந்தராஜ் தெரிவித்தார்.

ராணிப்பேட்டை

கைனூர் ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்தில் கைனூர் ஊராட்சி மன்றம் உள்ளது. இதில் கைனூர், பங்காரம்மா கண்டிகை, சின்னகைனூர், நேதாஜி நகர், கண்டிகை காலனி, இருளர் காலனி, ஸ்ரீராம் நகர், ராமதாஸ் நகர், ராமசாமி நகர், ராஜகோபால் நகர் உள்ளிட்ட 17 குக்கிராமங்கள் உள்ளது.

பங்காரம்மா கண்டிகையை சேர்ந்த ஜி.உமாமகேஸ்வரி கோவிந்தராஜ் ஊராட்சிமன்ற தலைவராக உள்ளார். இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட பொருளாளராகவும், பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குழு மாவட்ட தலைவராகவும் உள்ளார்.

கைனூர் ஊராட்சியில் செய்து முடிக்கப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

சாலை, கழிவுநீர் கால்வாய்

கைனூர் மேல்கண்டிகை, சின்ன கைனூரில் தலா ரூ.4 லட்சத்திலும், ராமதாஸ் நகரில் ரூ.6 லட்சத்திலும், ராமசாமி நகர், பங்காரம்மா கண்டிகை, வி.ஜி.என்.தெருவில் தலா ரூ.50 ஆயிரம் மதிப்பிலும், நேதாஜி நகரில் ரூ.2 லட்சத்து 75 ஆயிரத்திலும், நேதாஜி நகரில் ரூ.80 ஆயிரம் மதிப்பிலும் சிமெண்டு சாலை, இருளர் காலனியில் ரூ.8 லட்சம் மதிப்பில் 2 பேவர் பிளாக் சாலை, கைனூர் கண்டிகை காலனியில் ரூ.4 லட்சம், நேதாஜி நகரில் ரூ.2 லட்சத்து 73ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு, இந்திரா நகரில் ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் குடிநீர் குழாய், கண்டிகை காலனியில் ரூ.6 லட்சம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கண்டிகை காலனி, இருளர் காலனி பகுதிகளில் ரூ.10 லட்சம் மதிப்பில் கழிப்பிடம் உள்ளிட்ட பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

20 பயனாளிகளுக்கு வீடுகள்

மேல்கண்டிகை பகுதியில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் மழைநீர் கால்வாய், ராஜகோபால் நகரில், ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் ஆழ்துளை கிணறு, நேதாஜி நகரில் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி, கைனூர் ஆதிதிராவிடர் தொடக்க பள்ளிக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. பங்காரம்மா கண்டிகை, பவானி நகரில் ரூ.5 லட்சத்திலும், ராஜகோபால் நகரில் ரூ.7 லட்சம் மதிப்பிலும் சிமெண்டு சாலை, கண்டிகை காலனியில் நெற்களம், கைனூரில் அங்கன்வாடி மையம் கட்டும் பணிகள் தொடங்கப்பட உள்ளது.

நேதாஜி நகர் மானாங்குளம் ரூ.9லட்சத்திலும், கைனூர் கண்டிகை, ஆணைக்குட்டை குளம் ரூ.6 லட்சத்திலும், ராமதாஸ் நகரில் ரூ.15 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி உள்ளிட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பில் நூலகம் சீரமைக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் மூலம் 20 பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

தடையில்லா குடிநீர்

கைனூர் கிராமத்தில் எனது சொந்த செலவில் கண்காணிப்பு கேமரா அமைத்து உள்ளேன். 2 முறை பொது மருத்துவ முகாம், ஒருமுறை கால்நடை மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது. ஊராட்சியில் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. தினமும் காலையில் நான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று மக்களிடம் குறைகளை கேட்டு அதை உடனுக்குடன் தீர்த்து வைத்து வருகிறேன். மக்களுக்கு தங்கு தடை இல்லாமல் குடிநீர் கிடைக்க கூடுதல் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க பழுதடைந்த மின் கம்பங்கள் உடனுக்குடன் மாற்றப்பட்டுள்ளது. கழிவுநீர் கால்வாய்களில் குப்பைகள் தேங்காதவாறு தினமும் தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் உள்ள இளைஞர்கள் விளையாட்டில் சிறந்து விளங்க விளையாட்டு உபகரணங்கள் வாங்கி கொடுத்து ஊக்குவித்து உள்ளேன். கல்வியில் பின்தங்கிய ஏழை குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்து அவர்கள் கல்வியில் சிறந்து விளங்க நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

ஆரம்ப சுகாதார நிலையம்

ஊராட்சியில் மக்கள் குறைகளை தெரிவிப்பதற்கு முன்பாக அந்த குறையை நான் அறிந்து அதை சரி செய்து கொடுத்துள்ளேன். வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊராட்சியை பசுமையாக மாற்ற ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு உள்ளது. கைனூர் ஊராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவும், கால்நடை மருத்துவமனை கொண்டு வரவும், நேதாஜி நகரில் புதிய ரேஷன் கடை, ஓரடுக்கு ஜல்லி சாலை, தார் சாலை அமைக்க கோரிக்கை வைத்து உள்ளேன்.

ராணிப்பேட்டை மாவட்ட அளவில் மட்டுமில்லாமல் தமிழக அளவில் கைனூர் ஊராட்சியை முதன்மை ஊராட்சியாக மாற்ற ஒன்றிய கவுன்சிலர்கள் பா.பிரசாத், செ.நரேஷ், துணைத் தலைவர் எஸ்.வெங்கடேசன், வார்டு உறுப்பினர்கள் கே.ஜெயந்தி, கே.கீதா, எம்.புவனேஸ்வரி, எஸ்.மீனாட்சி, டி.சங்கர் கணபதி, பி.புருஷோத்தினி, எம்.விமலா, ஏ.துரைசாமி ஆகியோருடன் இணைந்து பாடுபடுவேன் என்று கூறினார்.


Next Story