முதலீடுகள் வருவதில் பிரதமருக்கும் பங்கு உண்டு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்


முதலீடுகள் வருவதில் பிரதமருக்கும் பங்கு உண்டு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
x

மாநிலத்தை மட்டும் கருத்தில் கொண்டு தொழில் முதலீட்டாளர்கள் வருவதில்லை என்று தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் இன்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த மாநாட்டில் பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும், தொழிலை விரிவுபடுத்தவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த மாநாட்டில் தமிழ்நாடு அரசின் செமி கண்டெக்டர் மற்றும் மேம்பட்ட உற்பத்தி கொள்கையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிலையில் பல்வேறு நாடுகளுக்கு சென்று பிரதமர் மோடி நல்லுறவை ஏற்படுத்தியதன் விளைவாகவே தமிழ்நாட்டிற்கு முதலீட்டாளர்கள் வருவதாக தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-

மாநிலத்தை மட்டும் கருத்தில் கொண்டு தொழில் முதலீட்டாளர்கள் வருவதில்லை. ஒரு நாட்டின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். தமிழ்நாட்டின் நிதி அமைச்சர், தொழில்துறை அமைச்சர் உள்ளிட்டோர் இணைந்து தொழில் தொடங்க வாருங்கள் என்று தொழில் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் வருகிறார்கள்.

ஆனால் முதன்மையானது என்னவென்றால் நாட்டின் மீது வைத்திருக்கும் நம்பிக்கை ஆகும். அதனால் இதில் மத்திய அரசின் பங்கும் பாரத பிரதமரின் பங்கும் இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story