தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில்-மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-முதன்மை கல்வி அலுவலர் தகவல்


தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டில்-மாணவர் சேர்க்கைக்கு 20-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்-முதன்மை கல்வி அலுவலர் தகவல்
x
தினத்தந்தி 18 April 2023 6:45 PM GMT (Updated: 19 April 2023 10:33 AM GMT)

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை

தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

மாணவர் சேர்க்கை

2023-24-ம் கல்வியாண்டிற்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 சட்டத்தின்படி 2023-24-ம் கல்வியாண்டிற்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளில் எல்.கே.ஜி. முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் எல்.கே.ஜி. வகுப்பிலும், 1-ம் வகுப்பு முதல் நடைபெற்று வரும் பள்ளிகளில் 1-ம் வகுப்பிலும் சேர்க்கைக்கு வருகிற 20-ந்தேதி முதல் மே 18-ந்தேதி வரை rte.tnschool.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சார்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்கள் இணையதளத்திலும், சம்பந்தப்பட்ட பள்ளி தகவல் பலகையிலும் மே 21-ந்தேதி அன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இத்திட்டத்தின் கீழ் எல்.கே.ஜி. வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2019 முதல் 31.7.2020-க்குள்ளாகவும், 1-ம் வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 1.8.2017 முதல் 31.7.2018-க்குள்ளாகவும் பிறந்திருக்க வேண்டும். பெற்றோர், விண்ணப்பதாரர்கள் பிறப்புச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் கீழ் விண்ணப்பிக்க சாதிச்சான்றிதழ், வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ், நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் கீழ் உள்ள வருமான சான்றிதழ், இருப்பிடச்சான்று ஆகியவைகளை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், முதன்மை கல்வி அலுவலா், மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்), மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை), மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), வட்டார கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி 12 வட்டார வள மைய அலுவலங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெயர் பட்டியல்

நிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் 23.5.2023 அன்று குலுக்கல் நடத்தப்பட்டு சேர்க்கைக்கான குழந்தைகள் தெரிவு செய்யப்படுவர். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயர் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் 24.5.2023 அன்று இணைய தளத்திலும் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகையிலும் வெளியிடப்படும். சோ்க்கைக்குத் தேர்வு செய்யப்பட்ட குழந்தைகளை 29.05.2023-க்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சோ்க்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story