பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சு வெல்லம் ஏலம்


பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சு வெல்லம் ஏலம்
x

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சு வெல்லம் ஏலம்

தஞ்சாவூர்

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சுவெல்லம் ஏலம் விடப்படுகிறது. இதில் கூடுதல் விலை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அச்சுவெல்லம்

திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, அய்யம்பேட்டை, பாபநாசம் பகுதியில் அச்சுவெல்லம் தயாரிக்க அதற்கான கரும்பை விவசாயிகள் நடப்பாண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் சாகுபடி செய்துள்ளனர்.10 மாதங்களாக சாகுபடி செய்யப்படும் இந்த கரும்பு நவம்பர் முதல் பிப்ரவரி மாதம் வரை வெட்டப்பட்டு, விவசாயிகள் தங்களுடைய விளைநிலங்களிலேயே குடிசை தொழிலாக பாகு காய்ச்சி, அச்சுவெல்லமாக உற்பத்தி செய்கின்றனர்.

தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அச்சுவெல்லம் பெரும்பாலும் பொங்கல் பண்டிகையின் போது அதிகளவில் பொதுமக்களால் வாங்கி உபயோகப்படுத்தப்படுகிறது.

தஞ்சை மாவட்டத்தில் உற்பத்தி செய்யக்கூடிய அச்சுவெல்லம் திண்டுக்கல் மாவட்டம் நெய்காரப்பட்டி, ஈரோடு ஆகிய இடங்களில் உள்ள வெல்ல மண்டிகளில் தனியார் வியாபாரிகளிடம், விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர்.

அச்சுவெல்லம் உற்பத்தி செய்ய செலவு அதிகம் ஆகிறது. ஆனால் அதற்கான உரிய விலை கிடைப்பதில்லை எனவும், தமிழக அரசே அச்சுவெல்லத்தை கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் தொகுப்பு திட்டத்தில் வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

விற்பனை செய்ய ஏற்பாடு

தஞ்சை மாவட்டத்திலிருந்து பிற மாவட்டங்களுக்கு வாகனங்களில் கொண்டு சென்று அச்சுவெல்லத்தை விற்பதில் பல சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் தஞ்சை மாவட்டத்திலேயே அச்சுவெல்லத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக தமிழக வேளாண் வணிகத்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அச்சுவெல்லத்தை ஏலம் விட முடிவு செய்துள்ளது. அதன்படி முதற்கட்டமாக பாபநாசத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் உள்ளூர், வெளியூர் வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாபநாசம், திருவையாறு பகுதிகள் உள்ள அச்சுவெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகள் வாரந்தோறும் வியாழக்கிழமையில் ஏலத்தில் பங்கேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏலம் விட முடிவு

பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தஞ்சை மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு செயலாளர் சுரேஷ்பாபு, ஒழுங்கு முறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் தாட்சாயிணி ஆகியோர் முன்னிலையில் அச்சுவெல்லம் தொடர்பாக விவசாயிகள், வியாபாரிகள் அடங்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வியாழக்கிழமை தோறும் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேளாண் வணிகத்துறையினர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏற்கனவே பருத்தி, உளுந்து, பயறு உள்ளிட்ட தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தற்போது வாரந்தோறும் பாபநாசம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் அச்சுவெல்லம் ஏலம் விடப்பட உள்ளது.

கூடுதல் தொகை கிடைக்க வாய்ப்பு

இதில் வியாபாரிகள் அதிகளவில் பங்கேற்க இருப்பதால் விவசாயிகளுக்கு கூடுதலாக தொகை, ஏலம் மூலம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதே போல் விவசாயிகள் அதிகளவில் அச்சுவெல்லத்தை கொண்டு வந்து பயன் அடைய வேண்டும். தமிழகத்தில் முதன்முறையாக அச்சுவெல்லம் ஏலம் பாபநாசத்தில் மட்டுமே விடப்படுகிறது என்றனர்.

இதுகுறித்து அச்சுவெல்லம் உற்பத்தி செய்யும் மாகாளிபுரம் பழனிசாமி கூறுகையில், விவசாயிகள் குடிசைத்தொழிலாக உற்பத்தி செய்யப்படும் அச்சுவெல்லத்தை விற்க பெரும் சிரமம் ஏற்பட்டது. தற்போது அரசே இதற்கான ஒரு ஏற்பாடுகளை செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இதனால் அச்சுவெல்லம் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஏலத்தின் மூலம் கூடுதல் தொகை கிடைக்கும் என்றார்.


Next Story