தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை


தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
x

கும்மிடிப்பூண்டி அருகே தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த அப்பாவரம் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் (வயது 37). இவருக்கு திருமணமாகி சரிதா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் தேவேந்திரன் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு செல்லவில்லை. இந்த நிலையில், நேற்று வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் கயிற்றை கொண்டு தேவேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் வில்வமணி தலைமையில் கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் தொழிற்சாலை ஊழியரின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story