மொபட் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு


மொபட் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் சாவு
x

ராசிபுரம் அருகே மொபட் மீது லாரி மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

நாமக்கல்

ராசிபுரம்

தனியார் ஊழியர்

ராசிபுரம் அருகே உள்ள அைணப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மகன் ஜெயப்பிரகாஷ் (வயது 29). எம்.எஸ்சி.பி.எட். படித்துள்ளார். திருமணம் ஆகவில்லை. இந்தநிலையில் ஜெயபிரகாஷ் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் புலனாய்வாளராக வேலை பார்த்து வந்தார். அதாவது விபத்தில் ஒருவர் இறந்தாலோ அல்லது காயமடைந்தாலோ இன்சூரன்ஸ் நிறுவனம் மூலம் நஷ்ட ஈடு வழங்கப்பட்டு வருகிறது. அதை ஆய்வு செய்யும் பணியில் அவர் ஈடுபட்டு வந்தார்.

நேற்று திருச்செங்கோட்டில் உள்ள அவர் பணியாற்றி வரும் இன்சூரன்ஸ் கம்பெனி அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலையில் அவரது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் குருசாமிபாளையம்-வண்டிப்பேட்டை தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகில் ராசிபுரத்தை நோக்கி சென்றார். அப்போது பின்னால் வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் ஹெல்மெட் அணிந்த நிலையில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ஜெயப்பிரகாஷ் பரிதாபமாக இறந்தார்.

விசாரணை

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் புதுச்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் ஜெயப்பிரகாஷ் இறந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவரது நண்பர்கள், உறவினர்கள் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.


Next Story