மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் - கே.பாலகிருஷ்ணன்


மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் - கே.பாலகிருஷ்ணன்
x

மின்சாரத்துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

வெளிப்பாளையம்,

நாகை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

முல்லை பெரியார் அணையை அரசு திறந்ததால், தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று அ.தி.மு.க சட்டமன்ற துணைத் தலைவர் உதயகுமார், மற்றொரு பிரிவு தலைவர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பேசி வருவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

அரசியல் ஆதாயத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசி வருகிறார்கள். இதை காரணம் காட்டி அதிமுக போராட்டம் நடத்தினால், அ.தி.மு.க.வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென் மாவட்டங்களில் போட்டி போராட்டம் நடத்தும்.

தமிழகம் மற்றும் கேரளா ஆகிய 2 மாநில மக்களையும் தூண்டி விட்டு கலவர சூழ்நிலையை உருவாக்குவது கண்டிக்கத்தக்கது. நாடு முழுவதும் உரத்தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே தேவையான உரத்தை மத்திய அரசு உடனடியாக இறக்குமதி செய்ய வேண்டும்.

குறுவை நெற்பயிருக்கு காப்பீடு இல்லாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்களால் மக்களுக்கு பயன் இல்லை. விவசாயிகளுக்கும் பயன் இல்லை.

எனவே மத்திய அரசு நிறுவனங்களே பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சாரத் துறையை தனியார் மயமாக்கினால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும். இதனால் ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் படுவார்கள். எனவே மின்சாரத் துறையை தனியார் மயமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story