பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு


பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 29 Sep 2023 12:15 AM GMT (Updated: 29 Sep 2023 12:15 AM GMT)

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

திண்டுக்கல்

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், பெரியார் பிறந்தநாளையொட்டி கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி கடந்த 17-ந் தேதி நடத்தப்பட்டது. திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த இந்த போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் கொசவப்பட்டி புனித வளனார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி மோகனப்பிரியா முதல் இடம் பிடித்து வெற்றி பெற்றார்.

திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர் டிக்சன் 2-ம் இடமும், பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக்கல்லூரியில் முதுகலை வணிகவியல் 2-ம் ஆண்டு படிக்கிற மாணவர் நாகஅர்ஜூன் 3-ம் இடமும் பிடித்தனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதலிடம் பிடித்த மாணவி மோகனப்பிரியாவுக்கு ரூ.5 ஆயிரம், சான்றிதழும், 2-ம் இடம் பிடித்த மாணவன் டிக்சனுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் சான்றிதழ், 3-ம் இடம் பிடித்த மாணவன் நாக அர்ஜூனுக்கு ரூ.2 ஆயிரம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் இளங்கோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story