பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்


பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள்
x
தினத்தந்தி 12 Oct 2023 6:45 PM GMT (Updated: 12 Oct 2023 6:47 PM GMT)

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் பரிசு வழங்கினார்.

சிவகங்கை

பேச்சு போட்டிகள்

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் அண்ணா, பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான பேச்சு போட்டிகள் நடைபெற்றது. இதில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெற்ற பேச்சு போட்டியில் மரக்காத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி ஸ்ரீலக்ஜனா முதல் பரிசையும், சூராணம, புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி மாணவி மோனிகாஸ்ரீ 2-வது பரிசையும், பூவந்தி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி சிவதாரணி மூன்றாம் பரிசையும் பெற்றனர்.

அத்துடன் அரசுப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கான சிறப்பு பரிசினை சிவகங்கை, மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி துர்க்காதேவி, திருக்கோட்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி மகாலெட்சுமி ஆகியோர் பெற்றனர்.

பரிசுகள்

இதே போல் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற போட்டியில் காரைக்குடி எல்.எப்.ஆர்.சி. மேல்நிலைப்பள்ளி மாணவர் முகிலேஸ்வரன் முதல் பரிசையும், தி.புதூர் ஆக்ஸ்வர்ட் பள்ளி மாணவி நவ்வி இளங்கொடி 2-வது பரிசையும், தேவகோட்டை புனித மரியன்னை மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி சவுமியா மூன்றாம் பரிசையும் பெற்றனர். அத்துடன் அரசுப்பள்ளி மாணவ-மாணவியருக்கான சிறப்பு பரிசினை மரக்காத்தூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவி கோபிகா, திருப்பத்தூர் நா.ம. அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹசினா ஆகியோர் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசுசாக ரூ.5000, இரண்டாம் பரிசுத்தொகையாக ரூ.3000, மூன்றாம் பரிசுத்தொகையாக ரூ.2000 மற்றும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு பரிசுத்தொகை ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்களும் கலெக்டர் ஆஷாஅஜீத் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராசன் மற்றும் பலர் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story