சொத்து குவிப்பு, செம்மண் குவாரி வழக்கு: அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


சொத்து குவிப்பு, செம்மண் குவாரி வழக்கு:  அமைச்சர் பொன்முடி மீதான விசாரணை 27-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

அமைச்சர் பொன்முடி மீதான சொத்து குவிப்பு, செம்மண் குவாரி வழக்கு விசாரணையை 27-ந்தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் கோர்ட்டு உத்தரவிட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரத்தை சேர்ந்த அமைச்சர் பொன்முடி, அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2006-ம் ஆண்டு விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கின் விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அமைச்சர் பொன்முடி, விசாலாட்சி ஆகிய இருவரும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சாட்சிகள் யாரும் ஆஜர் ஆகாததால் இவ்வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.

இதேபோல் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 7 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பான வழக்கு விசாரணையும் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், கோபிநாத், சதானந்தன் ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, இவ்வழக்கின் விசாரணையையும் வருகிற 27-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story