நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் திடீர் தர்ணாஅதிகாரிகள் பேச்சுவார்த்தை


நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் திடீர் தர்ணாஅதிகாரிகள் பேச்சுவார்த்தை
x
தினத்தந்தி 17 Aug 2023 7:00 PM GMT (Updated: 17 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

நீரோடை வழிப்பாதை

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ஏலகிரி ஊராட்சிக்குட்பட்ட கொத்தமல்லிக்காரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள நீரோடை வழிப்பாதை தூர்வாரும் பணியில் நேற்று ஊரக வேலை திட்ட பெண் பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது நீரோடை வழிப்பாதையை ஒட்டியுள்ள ஒரு சில நிலஉரிமையாளர்கள், நீரோடையை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் தூர்வாரும் பணியில் ஈடுபட்ட 100 நாள் பெண் பணியாளர்களை திட்டி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த ஏலகிரி ஊராட்சியை சேர்ந்த 100 நாள் பெண் பணியாளர்கள் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் பெண் பணியாளர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் ஆதாரமாக விளங்கும் நீரோடையை மீட்க நடவடிக்கை எடுக்ககோரி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரபரப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார், தர்ணாவில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளித்தனர். பின்னர் தர்ணா போராட்டத்தை கைவிட்டு 100 நாள் பெண் பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அலுவலக வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது,


Next Story