தர்மபுரி, நல்லம்பள்ளியில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


தர்மபுரி, நல்லம்பள்ளியில்விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 March 2023 7:00 PM GMT (Updated: 7 March 2023 7:01 PM GMT)
தர்மபுரி

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் தர்மபுரி மற்றும் நல்லம்பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் கீழ் 2023-2024-ம் நிதி ஆண்டுக்கு ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர்கள் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க தர்மபுரி ஒன்றிய தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாதையன், மாவட்ட செயலாளர் பிரதாபன், நிர்வாகிகள் பச்சாகவுண்டர், முருகேசன், மாதையன், லட்சுமணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

கோஷங்கள்

இதேபோல் நல்லம்பள்ளியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், நிர்வாகி முருகேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டப்படி வேலை அட்டை பெற்று பணியாற்றும் கிராமப்புற தொழிலாளர்களை பற்றியும் இந்த சட்டம் தொடர்பாகவும் இணையதளம் மூலம் அவதூறு செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் வேலை வழங்ககோரி கிராம ஊராட்சி செயலாளரிடம் வழங்கும் விண்ணப்பங்களை தனி பதிவேட்டில் பதிந்து அதன் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை ஏரி, உள்ளாட்சி ஏரி, குளம், குட்டைகளில் இருக்கும் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு வேலை அட்டை பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் விவசாய தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story