சுங்க கட்டண உயர்வை கண்டித்து லாரி உரிமையாளர்கள் ஏப்ரல் 1-ந் தேதி ஆர்ப்பாட்டம்-சம்மேளனம் அறிவிப்பு

நாமக்கல்:
தமிழகத்தில் சுங்க கட்டண உயர்வை கண்டித்து ஏப்ரல் மாதம் 1-ந் தேதி அனைத்து சுங்கச்சாவடிகள் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்து உள்ளது.
சுங்க கட்டணம் உயர்வு
தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதை கண்டித்தும், கலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வலியுறுத்தியும் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி சுங்க சாவடிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த லாரி உரிமையாளர்கள் முடிவு செய்து உள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் தன்ராஜ், செயலாளர் ராமசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுங்க கட்டணத்தை ஆண்டு தோறும் உயர்த்தி வரும், மத்திய அரசை கண்டித்து வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த சம்மேளன நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கண்டன ஆர்ப்பாட்டம்
அதன்படி அனைத்து உறுப்பு சங்க நிர்வாகிகளும், தங்களுடைய கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள லாரி உரிமையாளர்களுடன் அருகில் உள்ள சுங்கச்சாவடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி சம்மேளனத்தின் ஒற்றுமையையும், லாரி உரிமையாளர்களின் பலத்தையும் நிரூபித்து ஆர்ப்பட்டம் வெற்றி பெற ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஆர்ப்பாட்டத்திற்கு பதாகை தயார் செய்து கொள்வதுடன், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு சுங்கச்சாவடிகளுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையம் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முறையான அனுமதி பெற்று கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் அவர்கள் கூறி உள்ளனர்.






