கிருஷ்ணகிரியில்அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்


கிருஷ்ணகிரியில்அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 7:00 PM GMT (Updated: 26 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட தலைவர் கோவிந்தம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் பார்வதி, கவிதா, ராணி, பழனியம்மாள், மஞ்சுளா, மஞ்சு, பச்சியம்மா, முனியம்மா, ஜெகதா, மாலா, அனிதா, சித்ரா, ரோகிணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் தேவி, மாநில செயற்குழு உறுப்பினர் கஸ்தூரி, மாவட்ட தலைவர் மணி ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினர். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஸ்ரீதர், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் ஆகியோர் தொடக்க உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் பேசினார். மாநில துணைத்தலைவர் கோவிந்தம்மாள் நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் சுஜாதா நன்றி கூறினார்.

புதிய பென்சன் திட்டம்

காத்திருப்பு போராட்டத்தில், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு கூடுதல் பொறுப்பாக 2 அல்லது 3 மையங்கள் இன்சார்ஜ் பார்ப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கப்படும். 10 ஆண்டுகள் பணி செய்த அங்கன்வாடி உதவியாளர்களுக்கு எந்த விதமான நிபந்தனையும் இன்றி பதவி உயர்வு வழங்கப்படும். மே மாதம் அங்கன்வாடி மையங்களில் உள்ள பயனாளிகளுக்கு உலர் உணவு பொருட்களும், மே மாத விடுமுறையும் வழங்கப்படும் என்று துறை அமைச்சர் வாக்குறுதி அளித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்

அதேபோல் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதுபோல், அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளிக்க தமிழக அரசுக்கு பரிந்துரைத்து விடுமுறை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் உறுதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதனால் சமாதானம் அடைந்த அங்கன்வாடி ஊழியர்கள் நேற்று மதியம் 3 மணிக்கு காத்திருப்பு போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். முன்னதாக காலை மற்றும் மதியம் அங்கேயே உணவு சமைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் 800-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story