அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர் சாவு மன்னார்குடியில், உறவினர்கள் சாலை மறியல்


அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் திடீர்  சாவு மன்னார்குடியில், உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 12 Jun 2023 7:30 PM GMT (Updated: 13 Jun 2023 5:03 AM GMT)

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருவாரூர்

மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவித்த பெண் பரிதாபமாக இறந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பெண் சாவு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவை சேர்ந்த வீரமணி என்பவரின் மனைவி ராணி (வயது32). இவர் கடந்த 5-ந் தேதி இரவு பிரசவத்திற்காக மன்னார்குடியில் உள்ள அரசு மாவட்ட தலைமை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அன்று நள்ளிரவு ராணிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் 6-ந் தேதி ராணிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவரை பரிசோதித்த டாக்டர்கள் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இழப்பீடு வழங்க கோரிக்கை

ஆனால் சிகிச்சைக்கு கொண்டு செல்லும் வழியில் ராணி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் பிரசவத்தின் போது டாக்டர்கள் தவறான சிகிச்சை அளித்ததால் ராணி உயிரிழந்ததாக கூறி அவருடைய உறவினர்கள், பரவாக்கோட்டையை சேர்ந்த பொதுமக்கள் அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

இதை அறிந்த மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வத் ஆண்டோ மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியல் காரணமாக அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story