ராமேசுவரம் மீனவர்களை 21-ந்தேதிக்குள் விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம்


ராமேசுவரம் மீனவர்களை 21-ந்தேதிக்குள் விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம்
x

இலங்கை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்களை வருகிற 21-ந் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கை சிறைபிடித்த ராமேசுவரம் மீனவர்களை வருகிற 21-ந் தேதிக்குள் விடுவிக்காவிட்டால் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

மீனவர்கள் சிறைபிடிப்பு

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ந் தேதி மீன்பிடிக்க சென்ற 2 விசைப்படகுகள் மற்றும் 15 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். இந்த 15 மீனவர்களில் 14 வயது சிறுவன் ஒருவரும் குடும்ப சூழ்நிலை காரணமாக மீன் பிடிக்க சென்று கைது செய்யப்பட்டு உள்ளார்.

இந்த நிலையில் இலங்கை சிறையில் உள்ள ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய மத்திய-மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் வலசை பஸ் நிறுத்தம் எதிரே நேற்று அனைத்து விசைப்படகு மீனவர்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், இலங்கை கடற்படையால் இதுவரை சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு கொண்டுவர வேண்டும், பாரம்பரிய கடல் பகுதியில் இலங்கை கடற்படை பிரச்சினை இல்லாமல் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.

கோஷமிட்டனர்

ஆர்ப்பாட்டத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசு ராஜா தலைமை தாங்கினார். எமரிட், சகாயம், மகத்துவம், தட்சிணாமூர்த்தி, மீனவ மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள் இருதய மேரி, ஜான்சி ராணி உள்ளிட்ட ஏராளமான மீனவர்களும், பெண்களும் மற்றும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் என திரளானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் இலங்கை கடற்படையை கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோஷமிட்டனர்.

பின்னர் விசைப்படகு மீனவர் சங்க மாவட்ட செயலாளர் சேசுராஜா கூறியதாவது:-

பெரிய அளவில் போராட்டம்

மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்படுவது தொடர்கிறது. அரசு நடவடிக்கை எடுத்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் விடுவிக்கப்படாத நிலையே இருந்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 3 விசைப்படகுகள் மற்றும் 21 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் அனைத்து படகுகளையும் உடனடியாக மீட்டு கொண்டுவர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களின் கோரிக்கை குறித்து தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மத்திய வெளியுறவு மந்திரியை சந்திக்க அதிகாரிகள் உடனடியாக ஏற்பாடு செய்துதர வேண்டும். மீனவர்களையும் அனைத்து படகுகளையும் வருகிற 21-ந்் தேதிக்குள் (மீனவர் தினம்) விடுதலை செய்ய வேண்டும். இல்லை என்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story