தூத்துக்குடியில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு


தூத்துக்குடியில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு
x
தினத்தந்தி 5 April 2023 6:45 PM GMT (Updated: 5 April 2023 6:46 PM GMT)

தூத்துக்குடியில் கோடை காலத்தில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கோடைகாலத்தில் சீரான குடிநீர் வினியோகத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக, மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்து உள்ளார்.

ஆய்வு

கோடை காலம் தொடங்கி இருப்பதை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் வல்லநாடு நீரேற்று நிலையம் மற்றும் பல்வேறு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் நேரில் பார்வையிட்டு, நீர்த்தேக்க தொட்டிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

வி.வி.டி.மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் அதன் சுற்றி உள்ள பகுதிகளுக்கு வழங்கப்படும் நீரின் அளவு மற்றும் நீர் தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து கோடைகாலத்தில் தொய்வின்றி குடிநீர் வினியோகம் செய்வதற்காக மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் குடிநீர் குழாய் ஆய்வாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி குடிநீர் வினியோகம் தொடர்பாக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

தயார்

மேலும் அவர் பேசும் போது, நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் தாமிரபரணி ஆற்றில் வரும் தண்ணீர் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரின் அளவை தொடர்ந்து கண்கானிக்குமாறும், நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைந்துள்ள பகுதிகளைச் சுற்றியுள்ள அமலைச் செடிகள் மற்றும் கிணற்றுக்குள் நீர் வருவதற்கு தடையாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் ஆற்றில் வரும் நீரின் அளவானது குறைவாக இருந்தாலும் தற்போது வரை தூத்துக்குடி மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்கி வருகிறோம். எனவே மாநகர மக்கள் கோடை காலம் தொடங்கி இருப்பதால் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு வரும் நீரின் அளவையும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நீரின் அளவும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வருகிற கோடை காலத்தை சமாளிக்க தயாராக இருக்கிறோம்' என்று கூறினார்.


Next Story