பொதுவினியோக திட்டம் குறித்த குறைகேட்பு கூட்டம்; 8-ந்தேதி நடக்கிறது


பொதுவினியோக திட்டம் குறித்த குறைகேட்பு கூட்டம்;  8-ந்தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 4 April 2023 9:00 PM GMT (Updated: 4 April 2023 9:00 PM GMT)

பொதுவினியோக திட்டம் குறித்த குறைகேட்பு கூட்டம் வருகிற 8-ந்தேதி நடக்கிறது.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பொதுவினியோக திட்டத்தில் காணப்படும் குறைகளை களைவதற்கும், மக்களின் குறைகளை கேட்டு உடனுக்குடன் தீர்வு காணவும் ஒவ்வொரு மாதமும் 2-வது சனிக்கிழமையில் உணவுப்பொருள் வழங்கல் சம்பந்தமான பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படும். அதன்படி வருகிற 8-ந்தேதி (சனிக்கிழமை) பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் மற்றும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம் மாவட்டத்தில் 5 இடங்களில் நடக்கிறது.

பெரியகுளம் தாலுகாவில் ஏ.வாடிப்பட்டி ரெங்கநாதபுரம், தேனி தாலுகாவில் ரத்தினம்நகர், ஆண்டிப்பட்டி தாலுகாவில் திம்மரசநாயக்கனூர், உத்தமபாளையம் தாலுகாவில் காமாட்சிபுரம், போடி தாலுகாவில் உப்புக்கோட்டை ஆகிய இடங்களில் கூட்டம் நடக்கிறது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு ரேஷன் கடைகளில் பொருட்கள் வினியோகம், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், கடை மாற்றம், தொடர்பான கோரிக்கைகள், புகார்களை தெரிவிக்கலாம்.

மேலும், பொதுமக்கள் தங்களது குறைகளை முன்கூட்டியே, வட்ட வழங்கல் அலுவலர், கூட்டுறவு சார்பதிவாளர் ஆகியோரிடம் மனுவாக கொடுக்கலாம். முன்கூட்டியே பெறப்படும் புகார்கள், குறைபாடுகள் வகைபாடு வாரியாக பிரிக்கப்பட்டு உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் கொடுக்கப்படும் புகார்கள், குறைபாடுகள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story