திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 14 Feb 2023 8:28 AM GMT (Updated: 14 Feb 2023 11:11 AM GMT)

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வழங்கினார்.

திருவள்ளூர்

பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து நிலம் சம்பந்தமாக 94 மனுக்களும், சமூக பாதுகாப்பு திட்டம் தொடர்பாக 53 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 34 மனுக்களும், பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக 57 மனுக்களும் மற்றும் இதர துறைகள் சம்பந்தமாக 96 மனுக்களும் என மொத்தம் 334 மனுக்கள் பெற்றுக்கொண்டார். மேலும் மனுக்களின் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பாக வில்லிவாக்கம் வட்டாரம், கதவவூர் அங்கன்வாடி மையத்தில் பணியாளராக பணியில் இருக்கும் போது உயிரிழந்த ஒருவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையில் வில்லிவாக்கம் வட்டாரத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளராக பணிநியமனம் செய்யப்பட்டதற்கான ஆணையை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்துக்கொண்ட கலெக்டர் சிறுமற்றும் குறுந்தொழில் சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு சுய தொழில் புரிய தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் கடன் தொகை பெறப்பட்டதை தொடர்ந்து ரூ.2 லட்சத்து 33 ஆயிரத்து 332-க்கான மானிய தொகைக்கான காசோலைகளையும், தனியார் நிறுவனம் மற்றும் இந்திய எழுத்தறிவு திட்டம் இணைந்து ஏழை மாணவ மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு உதவுவதற்காக 22 மாணவ-மாணவிகளுக்கு மொத்தம் ரூ.3 லட்சம் மதிப்பீட்டிலான காசோலைகளையும் வழங்கினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அசோகன், தனித் துணை ஆட்சியர் மதுசூதனன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு, உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story